×

கோடை காலம் முடியும் வரை வனஊழியர்களுக்கு விடுமுறை கிடையாது

சேலம், மார்ச் 12: கோடை காலம் முடியும் வரை வன ஊழியர்களுக்கு விடுமுறை கிடையாது என வனத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.  வெயிலின் தாக்கம் தொடங்கியிருப்பதால், தற்போதே வனப்பரப்பை பாதுகாக்கும் பணியில் வனஊழியர்களை தீவிரமாக ஈடுபடுத்துகின்றனர். இக்கோடை காலத்தில் கடும் வெயிலின் காரணமாக ஆங்காங்கே தீ பரவல் ஏற்படும். இந்த தீ பரவலை தடுக்க, காட்டிற்குள் தீ தடுப்புகோடுகள் அமைக்கப்படுகின்றன. வனத்தை ஒட்டிச்செல்லும் சாலையோரங்களில் தேங்கி கிடக்கும் சருகுகளை அப்புறப்படுத்துதல், மனிதர்கள் நடமாட்டத்தை முற்றுலும் தடுத்தல் போன்ற பணிகளை செய்து வருகின்றனர். இதற்காக வனத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள், வனக்கிராம குழுக்களில் ஈடுபடும் நபர்களை முழுவீச்சில் களத்தில் இறக்கிவிட்டுள்ளனர்.

ஒவ்வொரு வன மண்டலம், கோட்டம், சரகங்களில் இந்த தீ தடுப்புபணியை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என வனத்துறை உயர்அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதில், கோடை காலம் முடியும் வரை சரகங்களில் பணியாற்றி வரும் வன ஊழியர்களுக்கு விடுமுறை கிடையாது என்ற உத்தரவையும் வழங்கியுள்ளனர். வனத்தில் தீ பரவலை தவிர்க்க தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதும், வனக்கிராம மக்களுடன் தொடர்பில் இருந்துக்கொண்டு, தீ ஏற்பட்டாலும் உடனே அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஒவ்வொரு வனச்சரகத்திலும் நடப்பாண்டு கோடையில் தீ விபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமுடன் பணியாற்றி வருகிறோம். தீ தடுப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, கண்காணித்து வருகிறோம். இதனால், கோடை முடியும் வரை, அதாவது ஜூன் மாதம் முடிய யாருக்கும் விடுமுறை கிடையாது. அனைவரும் களத்தில் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது,’’ என்றனர்.

Tags : vacation ,
× RELATED ஆயுதபூஜை விடுமுறைக்கால ரயில் முன்பதிவுகள் துவக்கம்