×

மேச்சேரி அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

மேச்சேரி, மார்ச் 12: மேச்சேரி அருகே ஆடு திருடிய 2 வாலிபர்கள், வாகன சோதனையின் போது போலீசில் சிக்கினர். மேச்சேரி  அருகே உள்ள எம்.காளிப்பட்டி மன்னாதன் கிராமத்தை சேர்ந்த விவசாயி கோவிந்தன். இவர்  மாடுகள் மற்றும் 5 ஆடுகளை வளர்த்து வருகிறார். கடந்த வாரம், இவரது பட்டியில் கட்டியிருந்த ஆடு ஒன்று திருடு போனது. இது குறித்து மேச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, மேச்சேரி எஸ்ஐ சுப்ரமணி தலைமையிலான போலீசார், மேட்டூர்  சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  

அப்போது அவ்வழியாக டூவீலரில் வந்த 2 பேர், போலீசாரை கண்டதும் டூவீலரை கீழே போட்டு விட்டு தப்பியோட முயன்றனர். இதை கண்ட போலீசார், அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்தனர். விசாரணையில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால்,  காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். அவர்கள் காடையாம்பட்டி அருகே உள்ள  குண்டுக்கல் பகுதியை சேர்ந்த செல்வம் மகன் ராமச்சந்திரன்(29), லட்சுமணன் மகன் வேலு என்பதும், இருவரும் சேர்ந்து கோவிந்தனுக்கு  சொந்தமான ஆட்டை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து ஆட்டை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.

Tags : Mecheri ,
× RELATED சேலம் மேச்சேரியில் யானைகள்...