சேலம், மார்ச் 12: அகில் இந்திய பல்கலைகழகங்களுக்கு இடையேயான கேலா இந்தியா தடகள விளையாட்டு போட்டிகள், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் கடந்த மாதம் நடந்தது. இதில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சேலம் மாவட்ட தடகள பயிற்சியாளர் இளம்பரிதியிடம் பயிற்சி பெற்று வரும் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டியில் பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் கலந்து கொண்ட ஏவிஎஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் கவுரவ்யாதவ் 800 மீட்டர் ஓட்டத்தில் 1.51.28 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார். நவீன்குமார் டெக்கத்லான் போட்டியில் 6112 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கம் வென்றார்.
இதேபோல், 3வது அகில இந்திய இளையோர் கேலோ இந்தியா தடகள விளையாட்டு போட்டி, அசாம் மாநிலம் கவுகாத்தியில் கடந்த ஜனவரியில் நடந்தது. இதில் தமிழக அணிக்காக பவித்ரா, அபிநய, கவுரவ்யாதவ் கலந்து கொண்டனர். போட்டியில் பவித்ரா, போல்வால்ட் போட்டியில் 3.50 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார். கவுரவ்யாதவ் 800 மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொண்டு 1.54.38 வினாடிகளில் ஓடி, வெள்ளி பதக்கம் வென்றார். சேலம் சாரதா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி வீராங்கனை அபிநய டிரிபிள் ஜம்ப் போட்டியில் 11.46 மீட்டர் நீளம் தாண்டியும், 400 மீட்டர் தொடரோட்ட போட்டியில் வெண்கல பதக்கம் வென்றும் சாதனை படைத்தார். இவர்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஞானசுகந்தி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.