குமாரபாளையம், மார்ச் 12: குமாரபாளையம் நகராட்சி பகுதியில், கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. குமாரபாளையம் நகராட்சி பகுதியில், கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு பணியில் 60 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்று பள்ளிபாளையம் பிரிவு ரோடு, ஆனங்கூர் சாலை, பேருந்து நிலையம், எடப்பாடி சாலை, தினசரி மார்க்கெட் உள்ளிட்ட10 இடங்களில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, வெளியில் சென்றால் வீட்டுக்குள் நுழையும் முன்பு கைகால்களை சுத்தமாக கழுவ வேண்டும். மிளகு, மஞ்சள், பூண்டு போன்ற எதிர்ப்பு சக்தி மிக்க உணவுகளை சேர்த்து கொள்ள வேண்டும்.
கொரோனா பாதித்தவரை தொடுவதன் மூலமோ, பொது இடங்களில் இருமுவது, தும்முவது போன்றவற்றின் மூலமோ ஒருவரிடமிருந்து மற்றவருக்கு எளிதில் பரவும். எனவே பொதுமக்கள் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். தும்மும் போதும், இருமும் போதும் கைக்குட்டைகளை வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. மேலும், காய்ச்சல் வந்தால் அரசு ஆரம்பசுகாதார நிலையம், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என வலியுறுத்தி நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லிபாபு, துப்புரவு அதிகாரி ராமமூர்த்தி மற்றும் நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.