×

வேலையில்லா திண்டாட்டத்தால் நாட்டில் தற்கொலைகள் அதிகரிப்பு மார்க்சிஸ்ட் தலைவர் குற்றச்சாட்டு

ராஜபாளையம், மார்ச். 12: வேலையில்லா திண்டாட்டத்தால் தற்கொலைகள் அதிகரிப்பதாக மார்க்சிஸ்ட் மத்திய கமிட்ட உறுப்பினர் வாசுகி குற்றம் சாட்டியுள்ளார். ராஜபாளையம் அருகே சேத்தூரில் மார்க்ஸிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் அர்ஜூனன் தலைமை வகித்தார். நகர செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருசாமி வரவேற்றார். மாவட்டக் குழு உறுப்பினர் ராமர், மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கவேல், கமிட்டி உறுப்பினர்கள் நீராத்திலிங்கம், கனகராஜ், பொன்னுச்சாமி, சந்தனகுமார், குருசாமி, துரைச்சாமி மற்றும் 50 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மத்திய கமிட்டி உறுப்பினர் வாசுகி பேசியதாவது: தற்போதைய கால கட்டத்தில் வருமானம் ரூ.5 உயர்ந்தால் விலைவாசி ரூ.15 உயர்கிறது. எந்த இடத்திலும் வருமானமும், விலைவாசியும் சந்திப்பதற்கான புள்ளி என்பது கிடையாது. அந்த அளவு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதை கம்யூனிஸ்ட்டுகள் சொல்லும்போது மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. தற்போது சர்வேதேச பத்திரிகையான போர்ப்ஸ் இந்திய பொருளாதாரம் கடந்த 42 ஆண்டுகள் இல்லாத அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது என எழுதியுள்ளது. இதனால் முதலாளிகள் சங்கத்தினர் தொழில் வீழ்ச்சி அடைந்துவிட்டது என கூறியுள்ளது. அதன்பிறகு பொருளாதாரத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது என மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

வாங்கிய கடனை திருப்பிக் கட்ட முடியாமல் விவசாயிகள் கொத்துக் கொத்தாக தற்கொலை செய்து கொள்வதை விட, தற்போது வேலையில்லா திண்டாட்டத்தால் தற்கொலைகள் பெருகி உள்ளது என புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது. படிப்புக்கு ஏற்ற வேலை, வேலைக்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில்லை. 5ம் வகுப்பு கல்வி தகுதி போதும் என்கிற துப்புரவு பணியாளர் வேலைக்கு முதுநிலை பட்டதாரி விண்ணப்பிக்கிறார். அது வேலையில்லா திண்டாட்டத்தின் கடுமையான அறிகுறி.
10 வகுப்பு கல்வி தகுதி வேலைக்கு பொறியாளர்கள் விண்ணப்பிக்கின்றனர். ரயில்வே துறையில் டி பிரிவு துப்புரவு பணிக்கு, இரண்டு பட்டம் பெற்றவர்கள், பொறியாளர்கள் விண்ணப்பம் செய்கின்றனர். வேலையில்லா திண்டாட்டத்திற்கு ஈடாக விவசாயம் தொடர்பான விஷயங்கள் மோசமாக உள்ளது. இவ்வாறு பேசினார்.

Tags : suicides ,Marxist ,country ,
× RELATED பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து...