×

இருமல், சளி இருந்தால் பக்தர்கள் வர வேண்டாம் கொரோனா தடுப்பில் களமிறங்கியது பழநி கோயில் நிர்வாகம்

பழநி, மார்ச் 12: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இருமல், சளி தொந்தரவு உள்ளவர்கள் கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டுமென பழநி கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா நோய் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 1.20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் தற்போது வரை கொரோனாவுக்கு 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கொரோனா பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அனைத்து செல்போன்களிலும் தற்போது காலர் டியூனாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்படுகின்றன. கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. ஆந்திர மாநிலம், திருப்பதியில் பக்தர்களுக்கு முககவசம் அவசியமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானதாக கருதப்படும் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வரும் மார்ச் 30ம் தேதி பழநி கோயிலில் நடைபெறும் முதன்மை திருவிழாவான பங்குனி உத்திரம் துவங்க உள்ளது. இவ்விழாவிற்கு 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவர். இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இருமல், சளி, ஜலதோஷம் உள்ளவர்கள் கோயிலுக்கு வருவதையும், திருவிழாக்களில் கலந்து கொள்வதையும் தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கோயிலுக்கு வரும் பக்தர்களில் யாருக்கேனும் இருமல், சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் இருந்தால் கோயில் நிர்வாகம் சார்பில் மலைக்கோயில், ரோப்கார் நிலையம், வின்ச் நிலையம், படிப்பாதை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா நோய் தடுப்பு சிகிச்சை முகாம்களில் உள்ள மருத்துவர்களை அணுகி ஆலோசனைகள் பெற்று கொள்ளலாமென அறிவுறத்தப்பட்டுள்ளது.

Tags : pilgrims ,
× RELATED நாகூர் தர்காவில் 467வது கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்