×

தண்டராம்பட்டு அருகே துணிகரம் பெண் விவசாயி வீட்டில் 60 சவரன், ₹10 லட்சம் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலை

தண்டராம்பட்டு, மார்ச் 12: தண்டராம்பட்டு அருகே பெண் விவசாயி வீட்டில் 60 சவரன், ₹10 லட்சத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த காம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜூனன். இவரது மனைவி படவேட்டாள்(58), விவசாயி. இவர்களது மகள் ஜெயக்கொடி, மகன் அன்பழகன். இவரது மனைவி விஜயசாந்தி. அர்ஜூனன், அன்பழகன் ஆகியோர் இறந்துவிட்டனர். இதனால் விஜயசாந்தி, ஜெயக்கொடி, படவேட்டாள் ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் படவேட்டாள் உட்பட 3 பேரும், வீட்டை பூட்டி கொண்டு அருகே உள்ள விவசாய நிலத்தில் நெல் அறுவடை செய்ய சென்றனர். வேலை முடிந்ததும் இரவு 8 மணியளவில் வீட்டிற்கு வந்த 3 பேரும், உணவு சாப்பிட்டு விட்டு ஹாலில் படுத்து தூங்கினர்.
நேற்று காலை 5 மணியளவில் எழுந்து பார்த்தபோது, வீட்டின் 3 அறைகளில் இருந்த 3 பீரோக்களும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் பீரோக்களை பார்த்தபோது, அதில் இருந்த 60 சவரன் நகை, ₹10 லட்சம் ஆகியன திருட்டு போனது தெரிந்தது.

நேற்று முன்தினம் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள், வீட்டின் முன்பகுதியில் மாடிப்படிக்கு அடியில் வைத்திருந்த சாவியை எடுத்து, பூட்டை திறந்து நகை, பணத்தை திருடிக் கொண்டு, மீண்டும் வீட்டை பூட்டி சாவியை அதே இடத்தில் வைத்துவிட்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து படவேட்டாள் வாணாபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் டிஎஸ்பி ஹேமசித்ரா, இன்ஸ்பெக்டர் பாரதி, சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிப்பட்டது. மேலும், போலீசார் வழக்குப்பதிந்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.
(தி.மலை)தண்டராம்பட்டு அடுத்த காம்பட்டு கிராமத்தில் நகைகள், பணம் திருட்டு நடந்த விவசாயி வீட்டில் டிஎஸ்பி ஹேமசித்ரா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். உள்படம்: மர்ம ஆசாமிகளால் பீரோ திறக்கப்பட்டு பொருட்கள் சிதறிக் கிடக்கிறது.

Tags :
× RELATED இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான...