அரியலூர், மார்ச் 11: இருங்களாக்குறிச்சியில் தடை செய்யப்பட்ட நேரத்தில் சிமென்ட் ஆலைகளுக்கு இயக்கிய லாரிகளை இளைஞர்கள் சிறைபிடித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.அரியலூர் மாவட்டத்தில் பள்ளி நேரங்களில் சிமென்ட் ஆலைக்கு செல்லும் டிப்பர் லாரிகளால் விபத்துகள் ஏற்பட்டு வந்தது. இதனால் பள்ளி நேரங்களில் காலை 8 முதல் 10 மணி வரை, மாலை 3.30 முதல் மாலை 5.30 மணி வரை சிமென்ட் ஆலைகளுக்கு டிப்பர் மற்றும் கனரக வாகனங்கள் இயக்கக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் செந்துறை அடுத்த இருங்களாகுறிச்சியில் நேற்று மாலை தடை செய்யப்பட்ட நேரத்தில் சிமென்ட ஆலை கனரக வாகனங்கள் சென்றது.
இதனால் டிப்பர் லாரிகளை ஒன்றிய கவுன்சிலர் தமிழ்மாறன் தலைமையிலான இளைஞர்கள் சிறைபிடித்தனர். அப்போது இந்த நேரத்தில் லாரிகளை இயக்கினால் மாணவர்கள் விபத்தில் சிக்கும் சூழல் ஏற்படும் என்றனர். பின்னர் தடை செய்யப்பட்ட நேரத்தில் வாகனங்களை இயக்க மாட்டோம் என உறுதியளிக்குமாறு கூறி வாகனங்களை இளைஞர்கள் அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.