திருச்சி, மார்ச் 11: கொரியாவிலிருந்து சொந்த ஊர் திரும்பிய பெரம்பலூர் மருத்துவ மாணவருக்கு சாதாரண காய்ச்சல் இருந்ததால் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார்.சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் கோர தாண்டவமாடி வருகிறது. இதன் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்தியாவிலும் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 54 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை என சுகாதாரத்துறை கூறியுள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் எசனையை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் அருண்(24). கொரியா நாட்டில் டாக்டருக்கு படித்து வருகிறார்.
இவர் கடந்த மாதம் 28ம் தேதி சொந்த ஊர் திரும்பினார். வீட்டுக்கு வந்த 2 நாளில் அவருக்கு கடுமையான காய்ச்சல், வாந்தி ஏற்பட்டது. அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்ைச பெற்றும் பலனில்லை. இதையடுத்து அவரை தாய் தங்கமணி திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 5ம் தேதி இரவு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு கொரோனா சிறப்பு வார்டில் சேர்க்கப்பட்ட அருணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா அல்லது வேறு வகையான காய்ச்சலா என கண்டறிய அவரது ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு அதில் எவ்வித வைரஸ் தாக்கம் இல்லை என கூறப்பட்டது.இதையடுத்து அவர் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.