நாகர்கோவில், மார்ச் 11: நாகர்கோவில் ராமன்புதூர் சந்திப்பு பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாய்க்குள் வாட்டர் டேங்க் ரோடு பைப்புவிளை பகுதியை சேர்ந்த சதீஷ் (35) என்பவர் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். மதுக்கு அடிமையான சதீஷ், தினமும் குடித்து விட்டு தகராறு செய்ததால், குடும்பத்தினர் இவரை விட்டு பிரிந்து சென்றனர். ராமன்புதூர் மற்றும் அந்த பகுதியில் உள்ள டீக்கடைகள், ஓட்டல்களுக்கு சைக்கிள் மூலம் குடிநீர் எடுத்து கொடுத்து, அதில் கிடைக்கும் பணத்தை வைத்து மது குடிப்பதை வழக்கமாக கொண்டு இருந்தார். கடந்த 8ம் தேதி இரவு, சதீஷ் மற்றும் அவருடன் மேலும் 2 பேர் சேர்ந்து அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் மது அருந்தியுள்ளனர். குடிபோதை தகராறில் ராமன்புதூர் பகுதியை சேர்ந்த ஏசுராஜன்(41) என்பவர் சதீசை கொலை செய்தது தெரியவந்தது. நேசமணிநகர் போலீசார் ஏசுராஜனை கைது செய்தனர். கடந்த ஆண்டு ஏற்பட்ட தகராறில் ஏசுராஜனை சதீஷ் பீர் பாட்டிலால் தாக்கியுள்ளார். இதில் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்துள்ளது.
சம்பவத்தன்று இரவு மது அருந்திக் கொண்டு இருந்த போது மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கி உள்ளனர். அப்போது ஏசுராஜன், சதீசை கீழே தள்ளி கல்லால் தாக்கி உள்ளார். பின்னர் சதீசின் இரு கால்களையும் பிடித்து தரதரவென இழுத்து வந்துள்ளார். கழிவுநீர் ஓடைக்குள் தள்ளுவதற்கு முன்பு சதீசை ஏசுராஜன் கழுத்தில் மிதித்துள்ளார். பின்னர் கழிவுநீரோடையில் தள்ளி,தலையில் கல்லைப்போட்டு சதீஷை கொலை செய்துள்ளார். கொலை செய்யப்பட்டவரை தரதரவென தரையில் இழுத்து வரும் காட்சி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.