×

நாற்காலியில் இருந்து தவறி விழுந்ததால் கொடிகயிற்றில் கழுத்து இறுகி 9ம் வகுப்பு மாணவன் சாவு

அம்பத்தூர், மார்ச் 11: நாற்காலி மீது ஏறி கொடி கயிற்றில் துணி காயப்போட்ட போது, திடீரென தவறி கீழே விழுந்ததால், கழுத்து இறுகி பள்ளி மாணவன் பரிதாபமாக பலியானார்.அம்பத்தூர் - புதூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் லிங்கதுரை. இவர் அதே பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இவரது மனைவி உமாராணி. இவர்களது மகள் அட்சயா (19), மகன் தர்ஷன் ஆதித்யா (14). இதில், தர்ஷன் அம்பத்தூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் மாலை தர்ஷன் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்துள்ளான். பின்னர், வீட்டின் படுக்கை அறையை பூட்டிவிட்டு, உள்ளே இருந்த குளியல் அறையில் குளிக்க சென்றுள்ளான். ஆனால், நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த பெற்றோர், கதவை தட்டியுள்ளனர்.

ஆனால் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அங்குள்ள கொடி கயிற்றில் தர்ஷன் கழுத்து இறுகி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான். அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவனை மீட்டு வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் தர்ஷன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில், குளித்து முடித்துவிட்டு வெளியில் வந்த சிறுவன், அறையில் உள்ள கொடிக்கயிற்றில் துணியை காயப்போட முயன்றுள்ளான். ஆனால், கொடிக்கயிறு உயரமாக இருந்ததால், அங்கிருந்த நாற்காலியை எடுத்து, அதன் மீது ஏறி கொடிக்கயிற்றில் துணியை காயப்போடபோது, தவறி கீழே விழுந்துள்ளான். அப்போது, கயிற்றில் தர்ஷன் கழுத்து இறுகி பரிதாபமாக இருந்தது தெரியவந்தது.



Tags : student ,
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...