மாமல்லபுரம், மார்ச் 11: மாமல்லபுரம் வந்த மத்திய இணை அமைச்சர் அர்ஜீன் ராம் மேக்வால், புராதன சின்னங்களை கண்டு ரசித்தார்.மாமல்லபுரம் உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது. மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் நேற்று சுற்றுலாவாக மாமல்லபுரம் வந்தார். அவரை கடற்கரை கோயில் அருகே மாமல்லபுரம் பாஜ நகர தலைவர் தர், மாவட்ட தலைவர் பலராமன், பாஜ கோட்ட பொறுப்பாளர் பாஸ்கரன், மாவட்ட மகளிரணி பொதுசெயலாளர் பாரதி ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
இதை தொடர்ந்து வெண்ணெய் உருண்டை பாறை, அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் ஆகிய இடங்களை அவர் கண்டு ரசித்தார். அவருக்கு மாமல்லபுரம் நகரின் வரலாற்று பெருமை, பல்லவர் கால சிற்பங்கள், அவை உருவாக்கப்பட்ட காலம் அவற்றை செதுக்கிய மன்னர்கள் குறித்த விபரங்களை சுற்றுலா வழிகாட்டிகள் தெளிவாக விளக்கிக் கூறினர்.மத்திய இணை அமைச்சர் வருகையொட்டி மாமல்லபுரம் டிஎஸ்பி (பொறுப்பு) அருள்மணி மேற்பார்வையில், மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.