காஞ்சிபுரம், மார்ச் 11: காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவம் நேற்று விஸ்வரூப தரிசனத்துடன் நிறைவடைந்தது.காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவம், கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் தங்க மான், சந்திரப்பிரபை, யானை, ஹம்ஸ வாகனம், நாகம், தங்கக் கிளி, குதிரை, வெள்ளிரதம், தங்க சிம்மம், சூரிய பிரபை, தங்க பல்லக்கு, முத்து சப்பரம், சரபம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி காமாட்சி அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் கடந்த 5ம் தேதியும், வெள்ளி ரதம் 7ம் தேதி இரவும் நடந்தது.இதில் காஞ்சிபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இறுதி நாளான நேற்று காமாட்சி அம்மன் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது.காலை 5 மணிமுதல் 7 மணிவரை நடந்த இந்த விஸ்வரூப தரிசன காட்சியை ஏராளமான பக்தர்கள் அதிகாலையில் வந்து தரிசனம் செய்துவிட்டு சென்றனர். இதற்கான விழா ஏற்பாடுகளை உதவி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) தியாகராஜன், கோயில் நிர்வாக அலுவலர் நாராயணன், பரம்பரை தர்மகர்த்தாவின் கார்யம் சல்லா விஸ்வநாத சாஸ்திரி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்தனர்.