திருவண்ணாமலை, மார்ச் 11: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேவாலயங்கள் பழுதுபார்த்தல், சீரமைத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள அரசு நிதியுதவி வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் ெதரிவித்துள்ளார். திருவண்ணாமலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: தமிழ்நாட்டில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நடப்பாண்டில் (2020-21) நிதிஉதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப் படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் நிதிஉதவி பெறுவதற்கு தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டிடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத் துறையில் பதிவு செய்திருத்தல் வேண்டும். தேவாலயமும் பதிவு செய்திருக்க வேண்டும். தேவாலயத்தை சீரமைப்பு பணிக்காக வெளி நாட்டிலிருந்து எவ்வித நிதிஉதவியும் பெற்றிருத்தல் கூடாது. அதற்கான சான்றிதழ் அளிக்க வேண்டும். சீரமைப்பு பணிக்காக ஒரு முறை நிதிஉதவி அளிக்கப்பட்ட தேவாலயத்திற்கு மறுமுறை நிதிஉதவி 5 ஆண்டுகளுக்கு பிறகு வழங்கப்படும்.
விண்ணப்ப படிவம், சான்றிதழ் மற்றும் அதற்கான உரிய ஆவணங்களுடன் திருவண்ணாமலை கலெக்டருக்கு வருகிற 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பப்படிவம் மற்றும் சான்றிதழ் www.bcmbcmw@tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். கலெக்டர் தலைமையிலான குழு அவ்விண்ணப்பங்களை அனைத்து உரிய ஆவணங்களுடன் பரிசீலித்து, கிறிஸ்தவ தேவாலயங்களை ஸ்தல ஆய்வு மேற்கொள்ளப்படும். மேலும், கட்டிடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல ஆணையருக்கு நிதிஉதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும். நிதிஉதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.