×

குறிஞ்சிப்பாடி, வடலூர் பகுதியில் அதிகரிக்கும் குடிநீர் ஆலைகளால் நிலத்தடி நீர் பாதிப்பு

நெய்வேலி, மார்ச் 11: குறிஞ்சிப்பாடி, வடலூர் பகுதியில் அதிகரித்து வரும் குடிநீர் ஆலைகளால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி, வடலூர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து ஏற்படும் வறட்சியின் பாதிப்பால் ஏரி குளங்களில் பெரும்பாலும் நீர் மட்டம் குறைந்துள்ளது. சில குளங்களில் மட்டுமே நீர் தேங்கி குடிநீருக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறு தேங்கும் நீர் விரைவாக வற்றி விடுகிறது. இந்நிலையில் வடலூர், விருப்பாச்சி, தையல்குணம்பட்டினம், ஆடூர், நெய்வேலி, சாத்தமங்கலம் உள்ளிட்ட ஊராட்சிகளில் குடியிருப்பு பகுதியில்  தொடங்கப்பட்டு வந்த குடிநீர் ஆலைகளால் கிராம பகுதியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகின்றது. இந்த ஆலைகளில் ராட்சத போர் மூலம் நாள்தோறும் பல லட்சம் லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டு பாட்டில்களில் அடைத்து வணிகரீதியாக விற்பனை செய்து வருகின்றனர். இந்த ராட்சத போர்வெல்களால் அருகில் உள்ள கிணறுகள், வீடுகளில் உள்ள போர்வெல்கள்  மற்றும் அரசு சார்பில் போடப்பட்டுள்ள போர்வெல்களில் நிலத்தடி நீர் மட்டம் விரைவாக குறைந்து வருகிறது.

இதனால் பொதுமக்களுக்கு சரிவர தண்ணீர் கிடைக்காமலும், விவசாயிகள் வயல்களில் நீர் பாய்ச்ச முடியாமலும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மேலும் குடிநீர் ஆலைகளில் வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகளால் மண் வளம் மற்றும் விவசாயிகள் நிலங்கள் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து விவசாயி கூறுகையில், அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டி தான் கிராமங்களில் இருக்கும் ஒரே குடிநீர் ஆதாரம். ஆனால் அதை சிதைக்கும் வண்ணம் அருகிலேயே தனியார் போர்வெல்கள் போடப்படுகின்றன. இதற்கு அரசு அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். மேலும் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு நாள் ஒன்றுக்கு குறைந்த கொள்ளளவு கொண்ட தொட்டி அமைக்கப்பட்டு மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் தனியார் ஆலைகள் மட்டும் அளவுக்கு அதிகமாக தினந்தோறும் குடிநீர் எடுப்பதை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். எனவே சட்ட விரோதமாக தண்ணீரை உறிஞ்சும் தனியார் ஆலைகளின் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags : drinking water plants ,Vadalur ,Kurinjipadi ,
× RELATED வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமையும்...