தூத்துக்குடி, மார்ச் 11: தூத்துக்குடி அதிகாரிகளால் ஏற்படும் பணிச்சுமையை குறைக்க வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். தூத்துக்குடி மாநகராட்சியில், ஒப்பந்த ஊழியர்களாக வேலை பார்த்து வரும் துப்புரவு தொழிலாளர்கள் நேற்று காலை திரண்டதோடு அதிகாரிகளால் ஏற்படும் பணிச்சுமையை குறைக்க வலியுறுத்தி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில், ‘‘மாநகராட்சியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த ஊழியர்களாக துப்புரவு பணியாற்றி வரும் தங்களை தினமும் சேகரிக்கும் குப்பைகளை 5 விதமாக தரம் பிரிக்குமாறு அதிகாரிகள் பணி சுமையை ஏற்படுத்தி வருவதாகக் குற்றம்சாட்டினர்.
மேலும் நாள்தோறும் குப்பைகளில் வந்துசேரும் நாப்கின்கள், தேங்காய் நார், பிளாஸ்டிக் கழிவுகள், மரத்துண்டுகள், காய்கறி கழிவுகள், எண்ணெய் கழிவுகள் என ஒவ்வொன்றையும் தனித்தனியாக தரம் பிரிக்க இரவு வெகு நேரமாகிறது. இத்தகைய பணிச்சுமையில் இருந்து விடுவிக்க வேண்டும். மேலும் சம்பள உயர்வு வழங்குமாறு கேட்கும்போது தகாத வார்த்தைகளால் அதிகாரிகள் பேசுவதோடு கோரிக்கைகளை அலட்சியப்படுத்துகின்றனர். இதனால் மிகுந்த மனவேதனைக்கு ஆளாகி உள்ளோம்’’ என்றனர். பின்னர் இதுதொடர்பான கோரிக்கை மனுவை மாநகராட்சி அதிகாரிகளிடம் அளித்து சென்றனர்.