தூத்துக்குடி, மார்ச் 11: தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுகவில் விடுபட்ட ஊர் கிளை, உட்கிளைகளுக்கான தேர்தலுக்கு வரும் 14ம் தேதி பதிவு செய்திடவேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தூத்துக்குடி வடக்குமாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ, விடுத்துள்ள அறிக்கை: கழகத்தின் 15வது பொதுத்தேர்தல் கடந்த மாதம் 21ம் தேதி முதல் இந்த மாதம் 10ம் தேதி வரை தலைமைக்கழக பிரதிநிதியான பாலவாக்கம் சோமு தலைமையில் நமது மாவட்டத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தலைமைக் கழக பிரதிநிதி தலைமையில் நடந்த வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தின்போது, கிளைக்கழக தேர்தலுக்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டது. ஒன்றியம் வாரியாக விண்ணப்பபடிவங்கள் வாங்கும் இடம், தேர்தல் நடத்தும் ஆணையாளர்களின் பெயர் விவரமும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், பொதுச்செயலாளர் அன்பழகனின் மறைவின் காரணமாக ஒருவாரகாலத்திற்கு கழக தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டடுள்ளது. இதற்கிடையே, கடந்த 27ம் தேதி விண்ணப்பப் படிவங்கள் கொடுக்க இயலாதவர்களிடம் இருந்து கடைசி வாய்ப்பாக வரும் 14ம் தேதி (சனிக்கிழமை) காலை 10மணி முதல் மதியம் 1 மணி வரை மாவட்ட அலுவலகமான தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் வைத்து மனுக்கள் பெறப்படுகின்றன. எனவே, அந்நாளில், 15வது பொதுத்தேர்தலின் தொடர்ச்சியாக ஊர்கிளை, உட்கிளை அமைப்பதில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதுகுறித்து உரிய ஆதாரத்துடன் என்னிடமோ அல்லது தலைமைக்கழக பிரதிநிதியான பாலவாக்கம் சோமுவிடமோ நேரில் புகார் அளித்தால் அதற்கு உரிய தீர்வு காணப்படும். முடியாதபட்சத்தில் தலைமைக்கழக பிரதிநிதியால் தலைமைக் கழகத்திற்கும் தெரியப்படுத்தப்படும். எனவே, இந்த வாய்ப்பை நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.