×

ஆட்டையாம்பட்டியில் டூவீலரில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பலி

ஆட்டையாம்பட்டி,  மார்ச் 11: ஆட்டையாம்பட்டியில்  இருந்து, திருச்செங்கோடு செல்லும் சாலையில் எஸ்.பாலம் பஸ் ஸ்டாப், சந்திரா  தியேட்டர் வளைவு, மருளையாம் பாளையம் பஸ் ஸ்டாப் ஆகிய பகுதிகளில்  போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தடுக்க 7 மீ அகலமுள்ள  சாலையை,10 மீட்டர் அகல சாலையாக மாற்ற, கடந்தாண்டு நவம்பர் 19ம் தேதி சுமார்  ₹5.44 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கப் பணி தொடங்கியது. இதுநாள்  வரையில் 40 சதவீதம் சாலைப்பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டு உள்ளது. பக்கவாட்டு  பகுதியை தோண்டி கான்கிரீட் கலவையை கொட்டியவர்கள், தார்கலக்கிய  ஜல்லிக்கற்களை போடாமல் விட்டுள்ளனர். கடந்த ஒரு மாதமாக சாலைப்பணிகள்  நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் நேற்று முன்தினம்  ஆட்டையாம்பட்டியை  சேர்ந்த ராஜேஸ்வரி (70)  தனது பேரன் கவினுடன் சேலத்தில்  உள்ள உறவினர் வீட்டுக்கு டூவீலரில் சென்று விட்டு, ஆட்டையாம்பட்டி  வந்துள்ளார். எஸ். பாலம் பஸ் ஸ்டாப் அருகே எதிரே வந்த வாகனத்துக்கு  வழிவிட சாலையை விட்டு கீழே டூவீலரை கவின் இறக்கினார். அப்போது நிலை  தடுமாறிய ராஜேஸ்வரி, சாலையில் விழுந்தார்.இதில் தலையில் படுகாயமடைந்த  அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் ராஜேஸ்வரி உயிரிழந்தார்.  இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Muthooty ,teenager ,
× RELATED பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி: டிரைவருக்கு 2 ஆண்டு சிறை