தர்மபுரி, மார்ச் 11: நல்லம்பள்ளி வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில், ஊட்டசத்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில், ஊட்டசத்து இருவார விழா (8ம் தேதி முதல் 22ம் தேதி வரை 15 நாட்களுக்கு) நடக்க உள்ளது. இதையொட்டி நேற்று நல்லம்பள்ளியில் ஊட்டசத்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த பேரணி நல்லம்பள்ளி சந்தைபேட்டையில் தொடங்கி, வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முடிந்தது. இதையொட்டி ஊட்டச்சத்து கண்காட்சி, கலைநிகழ்ச்சி மற்றும் நாடகம் நடந்தது. நல்லம்பள்ளி பேருந்து நிலையத்தில் கும்மி அடித்து ஊட்டசத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் ஊட்டசத்து குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் நாகலட்சுமி தலைமை வகித்து, விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், நல்லம்பள்ளி ஊராட்சி மன்றத்தலைவர் புவனேஸ்வரி மூர்த்தி முன்னிலை வகித்தார். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சித்தரா வரவேற்றார். புள்ளியல் அலுவலர் பிரேமா, மாவட்ட திட்ட உதவியாளர் புவனேஸ்வரி, மேற்பார்வையாளர்கள் முருகம்மாள், லட்சுமி, வட்டார ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வட்டார திட்ட உதவியாளர் ஆனந்த செல்வன் நன்றி கூறினார்.