×

அலையால் விழும் பனை மரங்கள் தடுப்புச்சுவர் கட்ட மீனவ மக்கள் வலியுறுத்தல்

சாயல்குடி, மார்ச் 11: சாயல்குடி கடற்கரை பகுதியில் கடல் அலையால் கரைகள் சேதமடைந்து பனைமரங்கள் சாய்ந்து விழுந்து வருவதால், தடுப்புச்சுவர் கட்ட மீனவ கிராம மக்கள் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னார் வளைகுடா கடற்பகுதியான கன்னிராஜபுரம், ரோச்மா நகர், நரிப்பையூர், மூக்கையூர், கீழமுந்தல், மாரியூர், வாலிநோக்கம் வரையிலான 15க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மீனவர்களுக்கு அரசு கட்டிகொடுத்த சுனாமி குடியிருப்பு வீடுகள் மற்றும் சொந்தமாக கட்டிய ஓடு, குடிசை வீடுகளில் கடற்கரையோரம் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். இப்பகுதி கடற்கரை மிக ஆழமானது என்பதால் எந்நேரமும் கடல் அலையின் சீற்றம் சற்று அதிகமாக இருக்கும். அதிகாலை, இரவு நேரங்கள் மற்றும் அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட பருவநிலை மாறும் காலங்களில் கூடுதலாக அலை சீற்றமாக இருக்கிறது. இதனால் அலை கரையை சேதப்படுத்தி வருகிறது.

கரையோரங்களில் மண் அரிமானத்தை தடுப்பதற்காக பனை மரங்கள், சவுக்கு மரங்கள் நடப்பட்டது. கடந்த கால வறட்சியால் பனைமரம், சவுக்கு மரம் பட்டுபோனது. தற்போது அலை கரையில் வந்து மோதி செல்வதால் பட்டுப்போன மரங்கள் வேறோடு சாய்ந்து வருகிறது. கரை நாளுக்கு நாள் சேதமடைந்து வருவதால் கரை மட்டம் கிராமத்தின் நிலப்பரப்பிற்கு சமமான நிலைக்கு மாறி வருகிறது. இதனால் பேரிடர் காலத்தில் பேரலை, கடல் சீற்றம் ஏற்பட்டால் கடல் தண்ணீர் கடற்கரை அருகே உள்ள மீனவர் வீடுகளுக்குள் புகும் அபாயம் உள்ளது. எனவே அலையை தடுப்பதற்கு கரையோரங்களில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும், புதிய பனைமரம், சவுக்கு போன்ற மரங்களை நடவேண்டும் என மீனவ கிராமமக்கள அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Fisheries ,
× RELATED கன்னியாகுமரி மாவட்டத்தில் விசைப்படகு...