×

பெருமாள் கோயிலில் தீர்த்தவாரி

திருப்புத்தூர், மார்ச் 11: திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப்பெருமாள் கோயிலில் மாசி மக தெப்ப உற்சவ நிறைவு நாளான நேற்று கோயில் குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் பிரசித்தி பெற்ற 108 வைணவத் தலங்களில் முக்கியத்துவம் வாய்ந்த சௌமிய நாராயணப்பெருமாள் கோயில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் மாசிமக தெப்ப உற்சவம் நடைபெறும். இந்தாண்டிற்கான விழா கடந்த பிப்.29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 2ம் நாள் முதல் 8ம் நாள் வரை தினந்தோறும் காலையில் சுவாமி திருவீதி புறப்பாடும், இரவு சிம்மம், ஹனுமன், கருடசேவை, சேஷ, குதிரை, அன்னம் வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி திருவீதி புறப்பாடும் நடைபெற்றது.

9ம் நாளில் பகல் தெப்பம் முட்டுத்தள்ளுதலும், இரவு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதி புறப்பாடு நடைபெற்றது. 10ம் திருநாளான நேற்று முன்தினம் காலை பெருமாள் தேவி, பூமிதேவியாருடன் எழுந்தருளி தங்கத்தோளுக்கினியானில் திருவீதி புறப்பாடும் நடைபெற்றது. தொடர்ந்து பெருமாள் தேவி, பூமிதேவியாருடன் தெப்பத்தில் எழுந்தருள பகலில் தெப்பக்குளத்தை ஒரு சுற்று சுற்றிவந்து தெப்பம் கண்டருளலும், இரவு மின் ஒளியால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பெருமாள் தேவி, பூமிதேவியாருடன் எழுந்தருளி தெப்பக்குளத்தை மூன்று முறை சுற்றிவர தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தீபம் ஏற்றி வழிபாடு செய்து சுவாமியை தரிசனம் செய்தனர். 11ம் நாளான நேற்று காலையில் கோயிலில் இருந்து பெருமாள் தேவி, பூமிதேவியருடன் தெப்ப மண்டபம் எழுந்தருளினார். பின்னர் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து தீர்த்தவாரி நடைபெற்றது. இரவு பெருமாள் தங்கத் தோளுக்கினியானில் ஆஸ்தானத்திற்கு எழுந்தருளளும், ஆசிர்வாதமும் நடைபெற்றது.

Tags : Perumal Temple ,
× RELATED ராமச்சந்திர பெருமாள் கோயிலில்...