கோவை, மார்ச் 11: அரசு போக்குவரத்து கழக கோவை கோட்டத்தில் ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை ஆகிய 4 மண்டலங்கள் உள்ளன. இவைகளில் உள்ள 40 கிளைகளில் 1500க்கும் மேற்பட்ட மப்சல் பேருந்துகளும், 715 டவுன் பேருந்துகளும், 245 தாழ்தள சொகுசு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.இவைகளில் காலாவதியான பேருந்துகள் பெரும்பாலானவை மாற்றப்பட்டு கடந்த 2 ஆண்டுகளில் பி.எஸ் 4தரத்துடன் 800க்கும் அதிகமான புதிய பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கோவை மாநகரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பழைய தாழ்தள சொகுசு பேருந்திற்கு பதிலாக முதற்கட்டமாக 50 புதிய ரெட் டீலக்ஸ் பேருந்துகள் இயக்கப்பட்டன. இப்பேருந்துகளில் பயணிகளின் வரவேற்பு அதிகமாக உள்ளதால் கூடுதல் ரெட் டீலக்ஸ் பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டன. அதன்படி புதிய பேருந்துகள் கரூரில் வடிவமைக்கப்பட்டு கோவைக்கு வந்துள்ளன. இப்பேருந்தில் தானியங்கி கதவு, அவசர கால வழி, சென்சார், தீயணைப்பு கருவி, 3 பக்க டிஜிட்டல் எல்.இ.டி வழித்தட பலகை உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை கொண்டது.
இது குறித்து அரசு போக்குவரத்து கழக கோவை கோட்ட மேலாண் இயக்குநர் அண்பு ஆபிரகாம் கூறுகையில், ‘‘கோவைக்கு வர உள்ள ரெட் டீலக்ஸ் பேருந்துகள் முழுவதும் டவுன் சேவைகளுக்கு இயக்கப்பட உள்ளது. மாநகரில் ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் தாழ்தள சொகுசு பேருந்துகளுக்கு மாற்றாக ரெட் டீலக்ஸ் சொகுசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதற்கு முன் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் இயக்கப்பட்டன. அடுத்தபடியாக கோவைக்கு வந்துள்ள பேருந்துகள் அவைகளுக்கு ஒதுக்கப்பட்ட கிளைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட பின் அதற்கென ஒதுக்கப்பட்ட வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. இம்மாதத்திற்குள் புதியதாக 165 பேருந்துகள் வரவுள்ளன. அவைகள் இம்மாத இறுதிக்குள் இயங்க துவங்கும் வகையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் வந்த புதிய பேருந்துகள் 3, 3டி, 4, 5சி, 11டி, 11ஈ, எஸ் 9ஏ, 10சி, எஸ் 11ஏ, 14டி, 14ஈ, 20ஏ, 21ஏ, 95, 41டி, 45சி, 96, 39, 39பி, 63பி, 70ஏ, 70பி, 111, 90ஏ, 111ஏ, 95, 59சி, 70 45எச், 140 உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. முழுவதும் வந்த பின்னர் அனைத்து பேருந்துகளும் இயக்கப்படும்’’ என்றார்.