×

துவரங்குறிச்சி அருகே ஜல்லிக்கட்டு போட்டி

மணப்பாறை, மார்ச் 10: துவரங்குறிச்சி அருகே கரடிப்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டி 18 பேர் காயமடைந்தனர். மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகேயுள்ள கரடிப்பட்டியில் தொட்டியத்து சின்னையா, சின்னம்மாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியை மருங்காபுரி தாசில்தார் சாந்தி மற்றும் டிஎஸ்பி., குத்தாலிங்கம் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இப்போட்டியில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து 691 மாடுகள், 237 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர் இதில், வாடிவாசலிலிருந்து சீறிப் பாய்ந்த காளைகள் முட்டி மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என 18 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு வாடிவாசல் அருகே அமைக்கபட்ட தற்காலிக மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டுப்போட்டியில் சிறப்பாக விளையாடிய மாடுகளின் உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் கட்டில், சில்வர் குடம், ரொக்கப்பரிசு உள்பட சிறப்புப்பரிசுகள் வழங்கப்பட்டது. மருங்காபுரி ஒன்றியக் குழு தலைவர் பழனியாண்டி உள்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர். 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Jallikattu Tournament ,Durankurichi ,
× RELATED அனல் பறக்கும் அவனியாபுரம்...