புதுச்சேரி, மார்ச் 10: புதுச்சேரி மசாஜ் சென்டரில் மீட்கப்பட்ட சிறுமி விபசாரத்தில் தள்ளப்பட்டாரா? என்பது தொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழு விசாரித்து வருகிறது. புதுச்சேரி, முத்தியால்பேட்டை, 100 அடி ரோட்டில் மசாஜ் சென்டரை சில தினங்களுக்கு முன்பு ஆய்வு செய்த போலீசார் அங்கிருந்து 5 அழகிகளை மீட்டனர். விபசார தொழிலை நடத்திய மசாஜ் சென்டரின் உரிமையாளரான கரையாம்புத்தூர் வாணஸ்ரீ மற்றும் உடந்தையாக இருந்த அவரது கணவர் ஜெயசந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அழகியுடன் உல்லாசமாக இருந்த திண்டிவனம், பெருமுக்கல் வாலிபர் சரவணனும் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே விபசாரத்தில் தள்ளப்பட்டு மீட்கப்பட்ட அழகிகளில் ஒருவர் 17 வயது சிறுமி என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்ட நிலையில் மற்ற 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில் அவர்களின் பெற்றோரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டனர். ஆனால் 17 வயது சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அரசு மகளிர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. மேலும் மசாஜ் சென்டரில் இருந்து மீட்கப்பட்ட சிறுமியிடம் குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினர் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமியும் விபசாரத்தில் தள்ளப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்பது தொடர்பான விசாரணையில் இறங்கியுள்ள காவல்துறை, அச்சிறுமி அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர். இதனால் விரைவில் மசாஜ் சென்டர் உரிமையாளர் காவலில் எடுத்து விசாரிக்கப்படுவார் என்று தெரிகிறது.