×

சாயல்குடி கடல்பகுதியில் வெளிமாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க தடை வேண்டும் மீனவர்கள் வலியுறுத்தல்

சாயல்குடி, மார்ச் 10: சாயல்குடி கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடிக்கும், வெளிமாவட்ட மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சாயல்குடி பகுதியின் மன்னார் வளைகுடா கடல் பகுதியான கன்னிராஜபுரம் ரோச்மா நகர், மூக்கையூர் முதல் ஏர்வாடி வரை 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் சுமார் 3 ஆயிரம் மீனவர் குடும்பங்கள் உள்ளன. ஆழமான பகுதியான கீழமுந்தல், மூக்கையூர், வாலிநோக்கம் கடல்களில் வல்லம், நாட்டு படகில் சென்றும், கரை வலை விரித்தும் மீன் பிடித்து வருகின்றனர்.கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா நடந்ததால் சில நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. திருவிழா முடிந்ததால் தற்போது இப்பகுதி மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். கூடுதல் விலையானாலும், அதிக விற்பனையாகும் சீலா மீன், இறால் மீன் வரத்து அதிகமாக உள்ளது. இதனால் இப்பகுதி மீனவர்கள் ஆழ்கடல் மற்றும் கரைவலை மூலம் மீன்பிடிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

லாப நோக்கத்திற்காக மொத்த மீன் வியாபாரிகள், தனியார் மீன் கம்பெனியினர் சிலர் தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, நாகப்பட்டிணம் ஆகிய வெளி மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களை வரவழைத்து, அதிக கூலி வழங்கி, அதிக குதிரை திறன் வேகம் கொண்ட ஆயில் எஞ்சின் படகுகள், தடை செய்யப்பட்ட பைபர் படகுகள் மற்றும் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை கொண்டு மீன் பிடித்து வருவதாக புகார் கூறப்படுகிறது. இதனால் பாரம்பரியமிக்க இப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என சாயல்குடி பகுதி மீனவர்கள் புகார் கூறுகின்றனர். இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள், கலெக்டரின் மக்கள் குறைதீர்க்கும் முகாம் ஆகியவற்றி பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே கலெக்டர் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Fishermen ,coast ,Sayalgudi ,
× RELATED இலங்கைக்கு படகில் கடத்திய ரூ.400 கோடி...