திருநின்றவூர், மார்ச் 10: ஆவடி அருகே திருநின்றவூர் பகுதியில் 400 அடி வெளி வட்ட சாலையில் உள்ள தடுப்பு சுவர் மீது பைக் மோதியதில் ஐசிஎப் ஒப்பந்த ஊழியர் பரிதாபமாக இறந்தார். ஆவடி அடுத்த திருநின்றவூர், நத்தமேடு, பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத் (30). இவர் சென்னை, ஐசிஎப் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று மாலை கோபிநாத் வேலை முடிந்து ஐ.சி.எப்பில் இருந்து வீட்டுக்கு பைக்கில் புறப்பட்டார். இவர், வண்டலூர்- நெமிலிச்சேரி 400அடி வெளிவட்ட சாலை, பாலவேடு கிராமம் வழியாக பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது, அவரது பைக் திடீரென நிலை தடுமாறி சாலையோர தடுப்பு சுவர் மீது மோதியது.
இதில் கோபிநாத்துக்கு தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்திக் பரிதாபமாக இருந்தார். தகவல் அறிந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர், போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த கோபிநாத்திற்கு, திருமணம் ஆகி ஒரு ஆண்டு ஆகிறது. இவரது மனைவிக்கு சமீபத்தில் சீமந்தம் நடைபெற்று, பெற்றோர் வீட்டிற்கு குழந்தை பெற சென்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.