குமாரபாளையம், மார்ச் 10: அரசு பள்ளிகளில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குமாரபாளையம் நகராட்சி பகுதிகளில், கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பஸ் நிலையம், சினிமா தியேட்டர்கள், உணவகங்களை தொடர்ந்து தற்போது, அரசு பள்ளிகளில் தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. நகராட்சியின் 4 மண்டலங்களிலும் இதற்காக 60 பணியாளர்கள் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு செல்லும் இந்த குழுவினர் அங்கு ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளிடம் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். கடந்த 14 நாட்களில் சீனாவிலிருந்து வந்தவர்களுக்கு, சளி, காய்ச்சல், இருமல், மூச்சுதிணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக சுகாதாரதுறை அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா ஆகிய நகரங்களுக்கு பயணித்தவர்கள், முற்றிலும் வெளி நடமாட்டத்தை தவிர்த்து, வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டுமென அறிவுறுத்தி, நகராட்சி பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.