காங்கயம், மார்ச் 10: காங்கயம் தேங்காய் எண்ணெய் ஆலை உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் பயிற்சி முகாம் நடந்தது. காங்கயம் சென்னிமலை ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த இந்த முகாமிற்கு காங்கயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் அருணாச்சலம் தலைமை தாங்கினார். சங்கத்தின் செயலாளர் சண்முகம், பொருளாளர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் உணவு பாதுகாப்புத்துறையின் திருப்பூர் மாவட்ட நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கலந்து கொண்டு பேசினார். இதில் தேங்காய் எண்ணெய் ஆலைகளை எவ்வாறு சுகாதாரமாக வைத்திருப்பது?, எண்ணெய் உற்பத்தியின்போது பணியாளர்கள் எவ்வாறு சுகாதாரத்தை பேணுவது? என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.