ஊட்டி, மார்ச் 10: நீலகிரி மாவட்டத்தில் பல நாட்களுக்கு பின் நேற்று நீர் பனி விழுந்ததால், பூங்கா ஊழியர்கள் மற்றும் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் நீர் பனி காணப்பட்டது. தொடர்ந்து, நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் இறுதி வரை உறை பனி காணப்பட்டது. அதன்பின், பனியின் தாக்கம் முற்றிலும் குறைந்து வெயிலின் தாக்கம் காணப்பட்டது. ஒரு சில தினங்கள் மழையும் ெபய்தது. கடந்த சில நாட்களாக பனி மற்றும் மழையின்றி பகல் நேரங்களில் வெயில் வாட்டி வருகிறது. இதனால், ஊட்டியை தவிர மாவட்டத்தின் அனைத்து பகுதிளிலும் சமவெளிப் பகுதிகளை போன்ற புழுக்கம் காணப்பட்டது. இரவு நேரங்களில் கூட குளிர் காணப்படுவதில்லை. இந்நிலையில், இரு நாட்களாக மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நீ்ர் பனி விழுந்தது.
குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பனியின் தாக்கம் காணப்பட்டது. தற்போது, கோடை சீசனுக்காக பூங்காக்கள் தயார் செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த திடீர் நீர் பனி பூங்கா பராமரிப்பாளர்களை அச்சுறுத்தியுள்ளது.
தொடர்ந்து ஓரிரு தினங்கள் விழுந்த நீர் பனியால் மலர் செடிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல், காய்கறி பயிர்களிலும் நோய் தாக்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். மலை காய்கறிகளான பீட்ரூட், முட்டைகோஸ், கேரட், பீன்ஸ், மேராக்காய், காலிபிளவர் உள்ளிட்டவற்றை பயிரிட்டுள்ள விவசாயிகள் நீர்பனி தொடரும் பட்சத்தில் காய்கறி தோட்டத்தில் நோய்பரவி மகசூல் பாதிக்க கூடும் என அச்சமடைந்துள்ளனர். அதேசமயம், சமவெளிப் பகுதிகளில் பகல் நேரங்களில் சுட்டெரிக்கும் வெயில், இரவு நேரங்களில் புழுக்கத்தால் அவதிப்பட்டு வந்த சுற்றுலா பயணிகள் நேற்று காலை பனி மூட்டத்துடன் காணப்பட்டதால் மிதமான காலநிலை நிலவியது.