×

பிளஸ் 2 கணிதம், விலங்கியல், வணிகம் பாடத்தேர்வு கடினம்

கோவை, மார்ச் 10:தமிழகம் முழுவதும் பிளஸ்2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடந்து வருகிறது. மொழிப்பாடத்தேர்வுகள் முடிந்த நிலையில், நேற்று முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் துவங்கியது. இதில், கோவை மாவட்டத்தில் நடந்த கணித தேர்வினை 13,032 பேர் எழுதினர். 381 பேர் ஆப்சென்ட். வணிகவியல் தேர்வினை 17,615 பேர் எழுதினர். 723 பேர் ஆப்சென்ட். மேலும், விலங்கியல் பாடத்தேர்வை 611 பேர் எழுதினர். 84 பேர் தேர்வு எழுதவில்லை. கணித தேர்வு குறித்து புனித காணிக்கை பள்ளி மாணவி முபஷிரா கூறுகையில், “ஒரு மதிப்பெண் வினாக்கள் சற்று எளிதாக இருந்தது. ஆனால், 5 மதிப்பெண் வினாக்கள் கடினமாக இருந்தது.

இதனால், நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுக்கும் வாய்ப்பு குறைவு” என்றார். வணிகவியல் தேர்வு குறித்து மாணவி ஸ்வேதா கூறுகையில், “வணிகவியல் தேர்வு எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. 5 மதிப்பெண், 3 மதிப்பெண் வினாக்கள் கடினமாக இருந்தது. இருப்பினும் 70 மதிப்பெண் வரை பெற முடியும்” என்றார். விலங்கியல் தேர்வு குறித்து மாணவி பவுசியா கூறுகையில், “5 மதிப்பெண் வினாக்கள் கடினமாக இருந்தது. டிவிஸ்ட் செய்து கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தது. இதனால், சற்று குழப்பம் அடைந்தேன். இருப்பினும், கடந்த ஆண்டு வினாத்தாளைவிட இந்த ஆண்டில் கேட்கப்பட்ட கேள்விகள் எளிதாகத்தான் இருந்தது. நல்ல மதிப்பெண் பெற முடியும். சென்டம் எடுக்க வாய்ப்பு இல்லை” என்றார்.

Tags : Commerce ,
× RELATED கிறிஸ்டல் ஜெல்லி பந்துகளுக்கு தடை...