திருத்துறைப்பூண்டி மார்ச் 10: கோயில் இடங்களில் குடியிருப்போருக்கு பட்டாவும், கோயில் நிலங்களை சாகுபடி செய்பவர்களுக்கு நில உரிமையும் வழங்கிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் சார்பு அமைப்புகளும் நீண்ட காலமாக போராடி வருகிறது.அதை தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு 18 வகையான புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு குடிமனை பட்டா வழங்கிடும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. பிறகு அந்த ஆணையை செயல்படுத்துவதற்கு முன்பாகவே இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் இதை அரசாணையை நிறுத்திவைக்க வேண்டும் என்று நீதிமன்றம் சென்று தடை உத்தரவு வாங்கினர். இதனால் அரசாணை 318ஐ அமுல் நடத்த முடியாமல் உள்ளது.இதனால் கோயில் இடங்களில் 40 ஆண்டு காலமாக குடியிருந்து வரும் ஏழை எளிய மக்களுக்கு குடிமனைபட்டா இல்லாமல் அரசின் பல்வேறு சலுகைகள் மறுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு உரிய சட்ட தலையீட்டின் அடிப்படையில் நீதிமன்ற தடை உத்தரவை நீக்கி உடனே குடிமனை பட்டா வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் முழுவதும் வரும் 13ம் தேதி அனைத்து ஒன்றிய நகர தலைநகரங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்திட முடிவு செய்துள்ளனர்.இந்த போராட்டத்தை தீவிரமாக நடத்துவதற்கான கலந்தோசனை கூட்டம் திருத்துறைப்பூண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நகர செயலாளர்ரகுராமன் தலைமையில் நடைபெற்றது. தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன் கலந்துகொண்டு போராட்டம் குறித்து பேசினார். இதில் மாவட்டசெயற்குழு உறுப்பினர் ஜோதிபாசு, மாவட்ட குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், சாமிநாதன், ஒன்றிய செயலாளர் காரல்மார்க்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.