×

வென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி - அம்பாள்களுக்கு தீர்த்தவாரி

பாவூர்சத்திரம், மார்ச் 10: வென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழாவில், நேற்று சுவாமி - அம்பாள்களுக்கு தீர்த்தவாரி நடந்தது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். பாவூர்சத்திரத்தில் உள்ள வென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா, ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான திருவிழா, கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நேற்று வரை நடந்தது. தினமும் ஒவ்வொரு சமுதாயம் சார்பில் சிறப்பு பூஜை நடந்தது. நேற்று (9ம் தேதி) 11ம் திருநாள், பிராமணர் சமுதாயம் சார்பில் நடைபெற்றது.

இதையொட்டி வென்னிமலை முருகன் கோயிலில் இருந்து  சுவாமி அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் கீழப்பாவூர் தெப்பக்குளம் பிள்ளையார் கோயிலை வந்தடைந்தார். அங்கு 12 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், கும்ப அபிஷேகம், தொடர்ந்து சுவாமி மற்றும் அம்பாளுக்கு தீர்த்தவாரி சிறப்பு அபிஷேக நிகழ்ச்சி நடந்தது. மாலை 4 மணிக்கு சுவாமி புறப்பட்டு வென்னிமலை முருகன் கோயிலை சென்றடைந்தார். கீழப்பாவூர் ராம் பஜனை மண்டலியர்  நாம சங்கீர்த்தனம், கோலாட்டம், கும்மி நடைபெற்றது. இரவு பக்தி பஜனை, பக்தி சொற்பொழிவு, இரவு 9 மணிக்கு புஷ்பாஞ்சலி தீபாராதனை நடந்தது. இதில் கீழப்பாவூர் வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை பிராமணர் சமுதாயத்தினர்  செய்திருந்தனர்.


Tags : Vanimalai Subramanya Swamy Temple ,
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி