×

குடிபோதையில் தகராறு கல்லால் தாக்கி தொழிலாளி கொடூர கொலை கண்காணிப்பு கேமரா மூலம் வாலிபர் கைது

நாகர்கோவில், மார்ச் 10: நாகர்கோவிலில் கல்லால் தாக்கி தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில் ராமன்புதூர் சந்திப்பு பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாய்க்குள் வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்தார். நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் நேசமணிநகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.  இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். ஏ.எஸ்.பி. ஜவகரும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் ஆய்வு நடந்தது. சடலமாக கிடந்தவர் உடலில் பின் தலை மற்றும் பல்வேறு பகுதியில் கல்லால் தாக்கியதற்கான தடயங்கள் இருந்தன. சடலத்தை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலம் கிடந்த இடம், மிகவும் பரபரப்பான இடம் என்பதால், காலையில் பொது மக்களும் பெருமளவில் திரண்டனர். சடலமாக கிடந்தவர் யார்? என்பது பற்றி அந்த பகுதியில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் இறந்து கிடந்தவர் நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோடு பைப்புவிளை பகுதியை சேர்ந்த சதீஷ் (35) என்பது தெரிய வந்தது. மது பழக்கத்துக்கு அடிமையான இவர், தினமும் குடித்து விட்டு தகராறு செய்ததால், குடும்பத்தினர் இவரை விட்டு பிரிந்து சென்றனர். ராமன்புதூர் மற்றும் அந்த பகுதியில் உள்ள டீக்கடைகள், ஓட்டல்களுக்கு சைக்கிள் மூலம் குடிநீர் எடுத்து கொடுத்து, அதில் கிடைக்கும் பணத்தை வைத்து மது குடிப்பதை வழக்கமாக கொண்டு உள்ளார். நேற்று முன் தினம் இரவு, சதீஷ் மற்றும் அவருடன் மேலும் 2 பேர் சேர்ந்து மொத்தம் 3 பேர் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் மது அருந்தியது தெரிய வந்தது. எனவே குடிபோதையில் இருந்த போது தகராறு ஏற்பட்டு, சதீசை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் நேற்று முன் தினம் இரவு சதீசை வாலிபர் ஒருவர் அழைத்து செல்லும் காட்சி இருந்தது. எனவே அந்த வாலிபர் யார்? என்பது பற்றி விசாரணை நடத்த இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இதில் அவர் ராமன்புதூர் பகுதியை சேர்ந்த ஏசு ராஜன் (41) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது வீட்டுக்கு சென்று ஏசுராஜனை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் கடந்த ஆண்டு ஏற்பட்ட தகராறில் சதீஷ் பீர் பாட்டிலால் ஏசுதாசனை தாக்கியுள்ளார். இதில் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன் தினம் மது அருந்திக் கொண்டு இருந்த போது மீண்டும் இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. மது அருந்தி விட்டு வந்தவர்கள் சம்பவ இடத்தில் வைத்து ஒருவரையொருவர் தாக்கி உள்ளனர். அப்போது ஏசுராஜன், சதீசை கீழே தள்ளி கல்லால் தாக்கி உள்ளார். இதில் ஓடையில் விழுந்த சதீஷ், பரிதாபமாக இறந்துள்ளார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து  கொலை வழக்கு பதிவு செய்து, ஏசுராஜனை போலீசார் கைது செய்தனர்.

Tags : dispute ,
× RELATED கொடுங்கையூர் டாஸ்மாக் கடையில் தகராறு...