×

உபயநாச்சியார்களுடன் எழுந்தருளினார் நம்பெருமாள் கோவிந்தா கோஷத்துடன் திரளான பக்தர்கள் தரிசனம்

திருச்சி, மார்ச் 6: ரங்கம் ரங்கநாதர் கோயில் மாசி தெப்பத்திருவிழாவையொட்டி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் தெப்ப உற்சவம் கண்டருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோஷத்துடன் தரிசனம் செய்து கண்டுகளித்தனர். ரங்கம் ரங்கநாதர் கோயிலில் மாசி தெப்பத்திருவிழா கடந்த 27ம் தேதி தொடங்கி இன்றுடன் (6ம்தேதி) நிறைவடைகிறது. தெப்பத்திருவிழாவையொட்டி தினமும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி மாலை 3 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 5 மணிக்கு வந்து சேர்ந்தார். இரவு 7.15 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணிவரை தெப்ப உற்சவம் கண்டருளுளினார். இரவு 9.15 மணிக்கு தெப்பக்குளத்தின் மைய மண்டபம் சென்றடைந்தார். பின்னர் அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இதில் பக்தர்கள் திராளாக கலந்துகொண்டு கோவிந்தா கோஷங்களுடன் தெப்ப உற்சவத்தை கண்டுகளித்து தரிசித்து சென்றனர். பாதுகாப்பு பணிகளில் ரங்கம் போலீசார் ஈடுபட்டிருந்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் மின் விளக்குகளால் தெப்பம் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது.

9ம் திருநாளான இன்று (6ம் தேதி) பந்தக்காட்சி நடைபெறுகிறது. இதையொட்டி காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி பகல் 1.30 மணியளவில் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேருகிறார். பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் மாலை 7 மணிக்கு மண்டபத்திலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்பட்டு பந்த காட்சியுடன் சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இத்துடன் தெப்பத்திருவிழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் கோயில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Tags : Devotees ,Namberummal Govinda ,
× RELATED திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி...