×

அதிரை கடலோர பகுதியில் மருத்துவ குணம் வாய்ந்த வரிமட்டி சீசன் துவக்கம்

அதிராம்பட்டினம், மார்ச் 6: அதிராம்பட்டினம் கடலோர பகுதியில் மருத்துவ குணம் வாய்ந்த வரிமட்டி சீசன் துவங்கியுள்ளது. இதன் விற்பனையில் அதிகளவில் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடலோர பகுதிகளில் வரிமட்டி சீசன் துவங்கியுள்ளது. நத்தை இனத்தை சேர்ந்த வரி மட்டி, வாழி மட்டி, வழுக்கு மட்டிகள் என பல வகைகள் உண்டு. அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் ஆகிய கடலோர கிராம பகுதிகளில் வசிக்கும் மீனவ பெண்கள் தினம்தோறும் காலை நேரங்களில் மட்டிகளை வாங்கி வந்து அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர். மட்டியின் சதைப்பகுதியை வறுத்தும், அவியல் செய்தும் சாப்பிடுவர். வரிமட்டியை கொண்டு தயாரிக்கப்படும் பிரியாணி சுவையாக இருக்கும். ஒரு மரக்கால் அளவில் வரிமட்டி ரூ.150க்கு விற்பனை செய்கின்றனர். இந்த வியாபாரத்தில் பெண்கள் அதிகளவில் ஈடுபடுகின்றனர்.

சீசன் நேரத்தில் மட்டி விற்பனை செய்து வரும் ஆண்டாளு என்பவர் கூறுகையில், ஏரிப்புறக்கரை கடலோர பகுதியில் அதிகளவில் வரிமட்டி பிடிபடுகின்றன. இந்த வரிமட்டி பலவித மருத்துவ குணம் கொண்டது. குறிப்பாக மூலச்சூட்டுக்கு ஏற்றது. வரிமட்டிகளை வலை போட்டு பிடிக்க முடியாது. சேற்றில் புதைந்து வாழும் தன்மை கொண்ட மட்டியை மீனவர்கள் அரிவலை கொண்டு குறைந்த ஆழம் உள்ள தண்ணீரில் மூழ்கி தான் பிடிக்கின்றனர். இதன் ஓடுகள் அழகுசாதன பொருட்கள், வர்ணம் பூச்சுகள் தயாரிக்க பயன்படுகிறது. வரிமட்டியின் ஓடு கிலோ ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. மார்ச் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை வரிமட்டி அதிகளவில் பிடிபடும் என்றார்.

Tags : Commencement ,coast ,Mediterranean Variety Season ,
× RELATED ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரமோற்சவ...