×

எள் பயிரை தாக்கும் பூச்சி, நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறை

சேதுபாவாசத்திரம், மார்ச் 6: சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் சாகுபடி செய்துள்ள எள் பயிரை தாக்கும் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) மாலதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் தற்போது மாசிபட்ட எள் வளர்ச்சி மற்றும் பூக்கும் பருவத்தில் உள்ளது. இந்த பயிர்களை தாக்கும் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்த பூச்சிகளை பொருத்தவரை மிக முக்கியமானது தண்டுபினைப்பான் மற்றும் காய்பினைப்பான். இவை தண்டு பகுதியை ஒன்றொடு ஒன்றாக பிணைத்து துவாரமிட்டு சேதப்படுத்தியும், வளர்ந்த பயிர்களில் இளம்காய்களில் துவாரமிட்டு பூ மற்றும் பிஞ்சுகளை சேதப்படுத்தி மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது.

இவைகளை கட்டுப்படுத்த விதைத்த 25, 35 மற்றும் 50வது நாட்களுக்கு பிறகு பாசோலோன் 400 மில்லி அல்லது மானோகுரோட்டபாஸ் 400 மில்லி அல்லது கார்பரில் 50 சதவீத தூள் 400 கிராம் இதில் ஏதாவது ஒன்றை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு ஏக்கர் பரப்பில் மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும் அல்லது 2 சதவீதம் வேப்பெண்ணெய் கரைசலை 2 முறை தெளிக்க வேண்டும்.

மற்றொரு சேதம் விளைவிக்க கூடிய பூச்சிகளில் காவடி புழுவும் ஒன்று. இப்புழு 60 மி.மீ நீளமாகவும், கருமை கலந்த பழுப்பு உடலில் செம்புள்ளிகளுடனும் கருப்பு தலையுடன் காவடி போன்று வளைந்து செல்லும். இலைகளை வெகுவிரைவாக தின்று அழித்து விடும். இதை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 750மில்லி மாலத்தியான் அல்லது 400 மில்லி பெண்தியான் மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

நோய்களை பொருத்தவரை வேர் அழுகல் நோய் மற்றும் பூவிலை நோயாகும். பூவிலை நோய் தாக்கிய செடிகளை முற்றிலும் பிடிங்கி அழித்துவிட வேண்டும். வேரழுகல் நோயை கட்டுப்படுத்த விதைவிதைக்கும் போதே விதையுடன் டிரைக்கோடெர்மாவிரிடின் என்ற பூசானகொல்லி மருந்தை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் வீதம் கலந்து விதைக்க வேண்டும். விதைத்து செடி வளர்ந்த பின் இந்நோய் தோன்றினால் ஒரு சதவீத கார்பன்டாசிம் (1 லிட்டர் தண்ணீருக்கு 1 கிராம் மருந்து) மருந்தை வேரின் அடிப்பாகத்தில் வேர் நன்றாக நனையுமாறு ஊற்ற வேண்டும். இவ்வாறு எள் பயிரை தாக்கும் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டு...