இடைப்பாடி, மார்ச் 6: இடைப்பாடி வெள்ளாண்டிவலசை காளியம்மன் கோயில் விழாவில் நேற்று பக்தர்கள் குண்டம் இறங்கி வேண்டுதல் நிறைவேற்றினர். சேலம் மாவட்டம் இடைப்பாடி வெள்ளாண்டிவலசை ஓம்சக்தி காளியம்மன், முனியப்பன் கோயில் மாசி திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், சாமி திருவீதி உலாவும் நடக்கிறது. நேற்று முன்தினம் பக்தர்கள் 1008 பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. நேற்று காலை கோயிலில் தீமிதி திருவிழா நடந்தது. முதலில் பூசாரி கரத்தை எடுத்துக்கொண்டு தீ மிதித்தார். அவரைத்தொடர்ந்து 7500க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த விழாவில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இடைப்பாடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.