புதுச்சேரி, மார்ச் 6: புதுச்சேரியில் ரேஷனில் வழங்கப்பட்ட இலவச அரிசிக்கு பதிலாக பணம் வழங்க வேண்டுமென கவர்னர் கிரண்பேடி கூறி வருகிறார். அரிசி வழங்குவதை தடுக்கும் நோக்கில் செயல்படும் கவர்னர் கிரண்பேடியை கண்டித்தும், மக்களின் தேவையான இலவச அரிசியை ரேசன் கடைகளில் தொடர்ந்து வழங்க ஒப்புதல் வழங்க வலியுறுத்தியும் கம்யூனிஸ்ட் கட்சிகள், திமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் அனைத்து அமைப்புகள் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கவர்னர் மாளிகை அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். திமுக நிர்வாகிகள் தைரியநாதன், நடராஜன், மார்க்சிஸ்ட் ராஜாங்கம், பெருமாள், சுதா சுந்தர்ராமன், சிபிஐ நாரா.கலைநாதன், கீதநாதன், வி.சிறுத்தைகள் தேவ.பொழிலன், லெனினிஸ்ட் பழனி, திராவிடர் கழகம். சிவ.வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பங்கேற்ற 50க்கும் மேற்பட்டோர் கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக கோஷமிட்டனர். அரிசி வழங்க கவர்னர் ஒப்புதல் வழங்கவில்லை என்றால் இது மக்கள் போராட்டமாக வெடிக்கும் என போராட்டக்குழுவினர் எச்சரித்துள்ளனர்.