×

சிவகங்கையில் அரசு ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டி

சிவகங்கை, மார்ச் 6: சிவகங்கையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி நடக்க உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கில் 10.3.2020 அன்று காலை 9மணிக்கு அரசு ஊழியர்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி நடக்க உள்ளது. இப்போட்டி ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இரு பிரிவாக நடக்க உள்ளது. ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், தொடர் ஓட்டம் ஆகிய தடகள போட்டிகள் நடத்தப்படும். கபடி, வாலிபால், இறகுப்பந்து, டேபிள் டென்னிஸ், டென்னிஸ், கூடைப்பந்து, கால்பந்து (ஆண்களுக்கு மட்டும்) ஆகிய குழு போட்டிகளும் நடத்தப்படும்.
இதில் பங்கேற்பவர்கள் முழு நேரமாக அரசுத்துறையில் பணிபுரிபவர்களாக இருத்தல் வேண்டும். போலீஸ், தீயணைப்பு, ராணுவம், தன்னாட்சி அலுவலக பணியாளர்கள், அரசு பொதுத்துறை நிறுவன பணியாளர்கள், அரசு அலுவலக தினக்கூலி பணியாளர்கள் பங்கேற்க இயலாது. போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கு ஒரு நாள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில் முதலிடம் பெறுபவர்கள், குழு போட்டிகளில் தேர்வு செய்யப்படுபவர்கள் மாநில போட்டிக்கு தகுதி பெறுவர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Sports Competition ,Sivaganga ,
× RELATED சிவகங்கை தொகுதி வேட்பாளரின் பிரச்சார ஜீப் பறிமுதல்!