×

தனியார்களின் பங்களிப்பில் நவீனத் தோற்றத்தில் மருதுறை அரசுப் பள்ளியின் வகுப்பறை

காங்கயம், மார்ச்.6: காங்கயம் அருகே, மருதுறை ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப்பள்ளியில் புதிதாக புனரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் கனகராஜ் தலைமை வகித்தார். ஒன்றியக்  கவுன்சிலர் ரேணுகா ஜெகதீசன், மருதுறை ஊராட்சித் தலைவர் செல்வி. சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் கார்த்திகேயன் வரவேற்றார். இதில் இப்பள்ளிக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் இலவசமாக டைல்ஸ் பதித்துக் கொடுத்த ஈரோடு எம்.ஆர்.பி. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிரபு, கட்டிடத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார். மேலும், மாணவர்கள் அமர்ந்து படிக்க வசதியாக ரூ.25 ஆயிரம் மதிப்பில் வட்ட மேஜைகளை வழங்கிய ஈரோடு கிரி, மாணவர்கள் கைகழுவ வசதியாக ஈரோடு மத்திய ரோட்டரி சங்கத்தின் மூலம் கைகழுவும் உபகரணத்தைப் பெற்று வழங்கிய ராஜா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

இந்த நிகழ்ச்சியில், காங்கயம் வட்டாரக் கல்வி அலுவலர்கள்  கி.மகேந்திரன், பா.சுசீலா, வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சுரேஷ், ஆசிரியப் பயிற்றுநர் ம.தாரணி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவுக்கு வந்திருந்த மாணவர்களின் பெற்றோர், வகுப்பறையில் போடப்பட்டிருந்த நவீன மேஜை- நாற்காலிகள், சுவரின் வண்ணப் பூச்சுகள், வழுவழு தரைத்தளம் என தனியார்களின் பங்களிப்போடு மிளிர்ந்த  நவீன வகுப்பறைகளை பார்த்து வியந்து, இதற்கு உதவி செய்தவர்களுக்கு  பாராட்டு தெரிவித்தனர்.

Tags : Classroom ,Madura State Government School ,
× RELATED போலீஸ் விசாரணை உப்பிலியபுரம்...