×

ஆழியார் நீர்மட்டம் 63 அடியாக சரிந்தது

பொள்ளாச்சி, மார்ச் 6: பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைபகுதியில் மழைஇல்லாததால், ஆழியார்அணையின்நீர்மட்டம் 63 அடியாக சரிந்துள்ளது. பொள்ளாச்சியை அடுத்த பரம்பிக்குளம் ஆழியார் பாசனத்திட்டத்தில் சோலையார், பரம்பிக்குளம், ஆழியார், திருமூர்த்தி ஆகிய அணைகள் முக்கியமானவையாகும். இதில், சோலையார் அணையில் இருந்து பரம்பிக்குளம் அணை வழியாக, சர்க்கார்பதி மின்உற்பத்தி நிலையத்திற்கு தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. அங்கு மின்உற்பத்திக்கு பிறகு தண்ணீர் வெளியேற்றப்பட்டு கான்டூர் கால்வாய்வழியாக, ஆழியார் மற்றும் திருமூர்த்தி அணைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.இதில், பொள்ளாச்சியை அடுத்த 120அடி கொண்ட ஆழியார் அணைக்கு கான்டூர் கால்வாய் மட்டுமின்றி சின்னாறு, அப்பர்ஆழியார், குரங்குஅருவி ஆகியவற்றில் இருந்தும் தண்ணீர் வருகிறது.

ஆழியார்அணையில் இருந்து, புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசன பகுதிக்கு மட்டுமின்றி, வழியோர கிராமங்களுக்கு குடிநீர் தேவைக்காகவும். கேரளமாநில பகுதிக்கும் என ஆண்டுதோறும் குறிப்பிட்ட டிஎம்சி தண்ணீர் திறக்கப்படுகிறது.கடந்த ஆண்டில், ஜூலை முதல் பலமாதமாக பெய்த தென்மேற்கு பருவமழையால் ஆழியார் அணைநீர் மட்டம் கிடுகிடு என்று உயர்ந்திருந்தது. இதனால் பலமாதங்களாக தண்ணீர் திறப்பு தொடர்ந்து அதிகமானது. அதன்பின், நவம்பர் மாதத்தில் ஓரிருநாட்களுக்கு பிறகுமழை இல்லாமல் போயிற்று.இதன்காரணமாக ஆழியார்அணைக்கு நீர்வரத்து மிகவும் குறைந்தது. தற்போது, அப்பர் ஆழியாரிலிருந்து வினாடிக்கு 200  முதல் 250கன அடிதண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இருப்பினும், ஆயக்கட்டு பாசனபகுதி மற்றும் கேரள மாநிலபகுதிக்கு என விநாடிக்கு சுமார் 500 முதல் 600 கன அடிவீதம் தண்ணீர் திறப்பு தொடர்ந்துள்ளது. இதனால், கடந்த டிசம்பர் மாதம் இறுதிவரை 110 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், நேற்றையநிலவரப்படி 63 அடியாக சரிந்துள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் முன்கூட்டியே கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் மழைப்பொழிவு இல்லாததால்ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே கோடை மழையை எதிர்பார்த்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Tags : Aliyar ,
× RELATED கடமான் மீது பைக் மீது மோதியதில் வாலிபர் பலி