×

கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகள் வரத்து குறைந்தது

ஈரோடு, மார்ச் 6: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கோயில் திருவிழாக்கள் நடந்து வருவதால் ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் நேற்று மாடுகள் வரத்து குறைந்து காணப்பட்டது. ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரை செக்போஸ்ட் பகுதியில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று நடந்த சந்தைக்கு மாடுகளை விற்பனை செய்வதற்காக ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பூர், கரூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் வந்தனர்.

நேற்று சந்தையில் 300 பசுமாடுகளும், 150 எருமை மாடுகளும், 100 வளர்ப்பு கன்றுகளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. வழக்கமாக 1,200க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு கொண்டு வருவார்கள். ஆனால், தமிழகத்தில் பல பகுதிகளில் கோயில் திருவிழாக்கள் நடந்து வருவதால் மாடு வரத்து குறைந்தது. குறிப்பாக, கரூர் மாவட்டம் வீரப்பூரில் நடந்து வரும் கோயில் திருவிழாவிற்கு அதிகமாக சென்றதால் மாடுகள் வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். வரத்து குறைந்த போதும் மாடுகளை வாங்கி செல்வதற்காக தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா, கோவா, மகாராஷ்டிரா போன்ற  மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வந்தனர். இதனால் மாடு விற்பனை 85 சதவீதமாக இருந்தது. கோயில் பண்டிகை முடிந்த பிறகு அடுத்த வாரத்தில் இருந்து மாடுகள் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ள வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில்,`தற்போது கோடைக்காலம் துவங்கி உள்ள நிலையில் மாடுகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்படும். இதனால், மாடுகளை விற்பனை செய்வதற்காக கொண்டு வருவார்கள். ஆனால், பல மாவட்டங்களில் கோயில் திருவிழா நடந்து வருவதால் சந்தைக்கு மாடு வரத்து குறைந்தது. விற்பனை ஓரளவிற்கு இருந்தது’ என்றனர்.

Tags : Karungalpalayam ,
× RELATED பறக்கும் படை அதிகாரிகளின்...