×

மது போதை தகராறில் பெட்ரோல் ஊற்றி மைத்துனரை எரித்து கொல்ல முயற்சி: அக்கா கணவருக்கு வலை

சென்னை: திருப்போரூர் அடுத்த கரும்பாக்கம் கிராமத்தில் இருளர் குடியிருப்பு உள்ளது. இங்கு சுமார் 50க்கும் மேற்பட்ட இருளர் பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் வசிப்பவர் நாகப்பன். இவருக்கு விஜி (20) என்ற மகனும், காமாட்சி  (22) என்ற மகளும் உள்ளனர். காமாட்சிக்கு திருமணமாகி, அதே பகுதியில் உள்ள அவரது கணவர் சரத்குமார் (24) வீட்டில் வசிக்கிறார். சரத்குமாருக்கு குடிப்பழக்கும் உள்ளது. இதனால், தினமும் குடித்து விட்டு வந்து காமாட்சியை அடித்து  உதைப்பதாக கூறப்படுகிறது. அப்போது அதே பகுதியில் வசிக்கும் விஜி, தனது அக்கா வீட்டிற்கு சென்று, மாமா சரத்குமாரை தட்டிக் கேட்பார் என தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில்  நேற்று முன்தினம் மாலை, வழக்கம்போல் சரத்குமார் குடித்து விட்டு வந்து, காமாட்சியை அடித்து உதைத்துள்ளார். இதையறிந்த விஜி, தனது அக்காவின் வீட்டுக்கு சென்று மாமாவை கண்டித்துவிட்டு, அக்காவை மீட்டு, தனது வீட்டுக்கு  அழைத்து சென்றுள்ளார்.

இந்நிலையில், இரவு 9 மணியளவில் விஜி தனது வீட்டில் வழக்கம் போல் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த சரத்குமார், பாட்டிலில் எடுத்து வந்த பெட்ரோலை விஜி மீது ஊற்றி தீ வைத்துள்ளார். தீப்பற்றியதால் அலறி துடித்த  விஜி, வீட்டில் இருந்து வெளியே ஓடினார். உடனே சரத்குமார், அவரை அவரை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, விஜி மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.  பின்னர் அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாரின்படி திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து,  சரத்குமாரை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED ரேஷன் பொருள் கடத்தல் வழக்கில்...