மாமல்லபுரம், மார்ச் 6: மாமல்லபுரம் வேதாசலம் நகரில், வாகனங்கள் செல்ல முடியாத அளவில் சாலையின் நடுவில் பொதுமக்களுக்கு இடையூறாக அமைக்கப்பட்ட மின் இணைப்பு பெட்டியை உடனடியாக அகற்றி, வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.மாமல்லபுரம் நகரம் முழுவதும் மின் கம்பங்களை அகற்றிவிட்டு, தரை வழியாக கேபிள் வயர்கள் புதைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும், ஒவ்வொரு குடியிருப்பு பகுதிகளுக்கும் மின் இணைப்பு வழங்க தெருக்களில் மின் இணைப்பு பெட்டிகள் அமைக்கப்படுகின்றன.இந்நிலையில், மாமல்லபுரம் வேதாசலம் நகர் 3வது தெருவில் மின் இணைப்பு பெட்டி அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தெரு மிக குறுகியதாக உள்ளது. இந்த தெரு முனையில் அமைக்கப்பட்ட மின் இணைப்பு பெட்டி தெருவை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வழியாக கார், ஆட்டோ, பைக் ஆகிய வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு மின் இணைப்பு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் உடல் நிலை சரி இல்லாதவர்களை அழைத்து செல்ல வரும் ஆம்புலன்ஸ் வாகனமும் இந்த தெருவில் உள்ள மின் இணைப்பு பெட்டியால் செல்ல முடியவில்லை. இதனால், சாலையை ஆக்கிரமித்து நடுவில் அமைக்கப்பட்ட மின் இணைப்பு பெட்டியை அகற்றி, வேறு இடத்தில் அமைத்து, இவ்வழியாக வாகனங்கள் செல்வதற்கு வழி ஏற்படுத்தி கொடுக்க மாமல்லபுரம் மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.