நெல்லை, மார்ச் 6: மகேந்திரகிரி இஸ்ரோவில் தமிழக இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என ஞானதிரவியம் எம்பி மக்களவையில் வலியுறுத்தியுள்ளார். நெல்லை தொகுதி எம்பி ஞானதிரவியம் இது தொடர்பாக மக்களவையில் சமர்ப்பித்த மனுவில் கூறியிருப்பதாவது: நெல்லை மாவட்டம், மகேந்திரகிரியில் இஸ்ரோவிள் ஐபிஆர்சி மையம் அமைந்துள்ளது. இந்த ஐபிஆர்சி மையத்தில் மற்ற மையங்களில் உள்ளது போல் போதுமான அளவில் நிரந்தர பணியாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். மகேந்திரகிரியில் அமைந்துள்ள ஐபிஆர்சி மையத்தில் பணியாளர்கள் நியமனத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்படுவதை விடுத்து தமிழகத்தில் பொறியியல் படித்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். பாதுகாப்பற்ற ஆபத்தான திரவங்களை கையாளும் மகேந்திரகிரி ஐபிஆர்சியில் மிகக்குறைந்த அளவிலேயே பாதுகாப்பு அலுவலர்கள் உள்ளனர். எனவே ஹரிகோட்டாவில் உள்ளது போல் உரிய பாதுகாப்புதுறை அதிகாரிகளை மகேந்திரகிரியில் அமைந்துள்ள ஐபிஆர்சி மையத்தில் நியமித்து, பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் சுற்றுவட்டார மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
மத்திய, மாநில அரசின் விதிகள் படி கடைநிலை ஊழியர்களில் 69 சதவீதம் பேர்களை இது போன்ற மத்திய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சுற்று வட்டார பகுதிகளிலிருந்து தான் நியமிக்க வேண்டும் என்பது நடைமுறையாகும். ஐபிஆர்சி மகேந்திரகிரியில் ஆரம்பிக்கும் போது சுற்றுவட்டார மக்களுக்கு வேலை வழங்குவதாக உத்தரவாதம் அளித்தனர். ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக எந்தவித நிரந்தர கடைநிலை ஊழியர்களையும் (சி மற்றும் டி பிரிவில்) நியமிக்கவில்லை. ஐபிஆர்சி மகேந்திரகிரியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தினக்கூலிகளாக வேலை பார்த்து வரும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைநிலை ஊழியர்களை நிரந்தரமாக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசு செவி சாய்க்கவில்லை. எனவே 20 ஆண்டுகளாக தினக்கூலிகளாக பணியாற்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தினக்கூலி ஊழியர்களை உடனே நிரந்தர ஊழியர்களாக்க காலதாமதம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.