×

வீட்டில் குழந்தையுடன் பெண்ணை அடைத்து வைத்து சித்ரவதை

புதுச்சேரி, மார்ச் 5:  புதுவை தவளக்குப்பம் அடுத்த ஆண்டியார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வினோதினி (25). இவர், முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவரை விட்டு பிரிந்து, விவாகரத்து பெற்றார். அதன்பிறகு குருவிநத்தத்தை சேர்ந்த முரளிகிருஷ்ணா என்பவருடன் கடந்த 2017ல் 2வது திருமணம் நடந்தது. திருமணத்தின்போது வினோதினிக்கு 25 பவுன் நகை, ரூ.4 லட்சம் சீர்வரிசை பொருள் மற்றும் மாப்பிள்ளைக்கு பைக் என வரதட்சணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 2வது திருமணம் செய்ததால் கூடுதல் வரதட்சணை கேட்டு முரளிகிருஷ்ணாவின் தாய் அன்பரசி, தந்தை ராஜவேலு, சகோதரி கவிதாமணி ஆகியோர் சித்ரவதை செய்து வந்துள்ளனர். இதனிடையே, வினோதினி கர்ப்பமாகி கடந்த 5 மாதங்களுக்கு பெண் குழந்தை பெற்றெடுத்தார். தாய் வீட்டில் தங்கியிருந்த வினோதினி, சில மாதங்களுக்கு முன்பு குழந்தையுடன் கணவர் வீட்டுக்கு சென்றார். அப்போது பெண் குழந்தை பெற்றுள்ளதால் மேலும் 5 பவுன் நகையை தாய் வீட்டில் இருந்து வாங்கி வர கணவரின் வீட்டினர் கொடுமை செய்தனர். மேலும் 3 நாட்கள் குழந்தையை வினோதினியை வீட்டில் அடைத்து வைத்து கொடுமை செய்துள்ளனர்.

இதனால் வினோதினி, தனது குழந்தையுடன் தாய் வீட்டுக்கு சென்றார். அதன்பின், உறவினர்கள் சமரசம் செய்ததின்பேரில் முரளிகிருஷ்ணா தனது மாமியார் வீட்டிலேயே தங்கி மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்தார். சில நாட்களுக்குப்பிறகு, தனது பெயரில் வீட்டுமனை வாங்கித்தரவும், வினோதினியின் தந்தை இறந்து விட்டதால் அவரது அரசு வேலையை தனக்கு விட்டுத்தரவும் முரளிகிருஷ்ணா தகராறு செய்து மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். மேலும், வினோதினியிடம் தகராறு செய்து விட்டுச்சென்ற முரளிகிருஷ்ணா, அதன்பின் மனைவி, குழந்தையை பார்க்க வரவில்லை.  இது குறித்து வினோதினி, புதுவை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், கணவர் முரளிகிருஷ்ணா மற்றும் மாமியார், மாமனார், நாத்தனார் ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : baby girl ,home ,
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...