திருச்செந்தூர், மார்ச் 5: திருச்செந்தூர் அருகே கடைவீதிக்கு சென்றபோது மாயமான தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர். திருச்செந்தூர் அடுத்த புதூர், பிச்சிவிளையைச் சேர்ந்தவர் அருணகிரி (54). பனை ஏறும் தொழிலாளி. இவரது மூத்தமகன் முத்துகுமாருக்கும், வடலிவிளையைச் சேர்ந்த பாஸ்கரன் மகள் சுபிதாவுக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.
இதையடுத்து புதூரில் தனிக்குடித்தனம் நடத்திவந்தனர். பின்னர் மனைவியை புதூரில் விட்டுவிட்டு பணி நிமித்தம் கோவை சென்ற முத்துகுமார், வளைகாப்பிற்காக கடந்த மாதம் 26ம் தேதி பிச்சிவிளை திரும்பினார். 27ம் தேதி வளைகாப்பு விழா நடந்த நிலையில் மறுநாள் (28ம் தேதி) காலை 11 மணி அளவில் கடைக்கு செல்வதாக கூறிச் சென்ற முத்துகுமார், பின்னர் வீடு திரும்பவில்லை.
இதனால் பதறிய குடும்பத்தினர் நண்பர்கள், உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவரைப் பற்றி எந்தவிதத் துப்பும் கிடைக்கவில்லை. மேலும் அவரது செல்போனும் ‘ஸ்விட்ச் ஆப்’ செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இதுகுறித்து அருணகிரி திருச்செந்தூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப் பதிந்த போலீசார், மாயமான முத்துகுமாரை தேடி வருகின்றனர்.