×

48 நாட்கள் நடக்கும் பங்குனி பிரம்மோற்சவ விழா திருவானைக்காவல் கோயிலில் கொடியேற்றத்துடன் துவக்கம்

திருச்சி, மார்ச் 5: திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேவரி கோயிலில் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக வரும் 26ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. பஞ்சபூதங்களில் நீர்ஸ்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில். இங்கு ஆண்டுதோறும் பங்குனி மண்டல பிரம்மோற்சவம் 48 நாட்கள் கொண்டாடப்படும். அதன்படி இந்தாண்டு பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வரும் ஏப்ரல் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. பிரம்மேற்சவத்தையொட்டி முன்னதாக சுவாமி, அம்மன், விநாயகர், சோமஸ்கந்தர், பிரியாவிடை ஆகிய பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் நேற்று காலை 9.30 மணிக்கு கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரம் அருகே வந்தனர். கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பின்னர் காலை 10 மணிக்கு மேஷ லக்னத்தில் பெரிய கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

விழாவையொட்டி வரும் 21ம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி தேர் திருவிழா தொடங்குகிறது. அன்று காலை தேருக்கு முகூர்த்தக்கால் நடப்படுகிறது. அன்றிரவு சோமாஸ்கந்தர் புறப்பாடும், 2ம் நாள் சூரியபிரபை வாகனத்திலும், சந்திரபிரபை வாகனத்திலும், 3ம் நாள் பூத வாகனத்திலும் மற்றும் காமதேனு வாகனத்திலும், 4ம் நாள் கைலாச வாகனத்திலும், கிளி வாகனத்திலும், 5ம் நாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர். 30ம்தேதி காலை நடராஜர் ஊடல் உற்சவம், நண்பகல் தீர்த்தவாரி நடைபெறுகிறது. மாலை ஏகசிம்மாசனத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது. இதனை தொடர்ந்து சொக்கர் உற்சவம், மவுனோத்ஸவம், சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெறுகிறது.

ஏப்ரல் 9ம் தேதி பஞ்சப்பிரகார விழா நடைபெறுகிறது. அதையொட்டி சுவாமி அம்மன் வேடத்திலும், அம்மன் சுவாமி வேடத்திலும் வெள்ளி மஞ்சத்தில் எழுந்தருளி 5ம் பிரகாரத்தில் வீதி உலா நடக்கிறது. ஏப்.11ம் தேதியுடன் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் மார்ச் 26ம் தேதி நடைபெறுகிறது. அதற்கு முந்தைய நாள் தெருவடைச்சான் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 27ம்தேதி வெள்ளிமஞ்சத்திலும், 28ம்தேதி வெள்ளி குதிரை வாகனத்திலும், பல்லக்கிலும், 29ம்தேதி அதிகார நந்தி வாகனத்திலும், சேஷவாகனத்திலும் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.

Tags : ceremony ,Panguni Brahmotsava ,Thiruvanaikaval ,
× RELATED பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா