திருச்சி, மார்ச்.5: திருச்சியில் தனியார் கல்லூரி மாணவிகள் தலைமுடியை புற்று நோயாளிகளுக்கு தானமாக வழங்கினர். பொதுவாக சிலர் வீணாக வெட்டி முடியை விரயம் செய்கின்றனர். ஆனால் இந்த தலைமுடி புற்று நோயாளிகளுக்கு மிகவும் அவசியமானதாக தேவைப்படுகிறது. புற்று நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீமோ தெரப்பி சிகிச்சை கொடுக்கப்படும். இந்த தெரப்பியின்போது அவர்களுக்கு முடி பெரும்பாலும் உதிர்ந்து விடும். இதனால் சில பெண்கள் மனதளவில் பாதிக்கப்பட்டு வெளியில் செல்வதையே தவிர்த்து விடுகின்றனர். அதே சமயம் வசதியுள்ளவர்கள் விக் வைத்துக்கொண்டு வெளியில் செல்கின்றனர். விக்கின் விலை அதிகம் என்பதால் ஏழைகளால் வாங்க முடியாத நிலை உள்ளது. எனவே முடியை தானமாக பெற்று தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் விக் தயாரித்து அவர்களுக்கு வழங்க ஏதுவாக மாணவிகள் தங்கள் முடியை தானம் வழங்கும் நிகழ்ச்சியானது திருச்சி தனியார் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.
புற்று நோயாளிகளுக்கான தானத்தில் எங்கள் பங்கும் இருக்க வேண்டும் என்று எண்ணிய மாணவிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தாமாக முன்வந்து முடி தானம் செய்தனர். இதற்காக தனியார் சிகை அலங்கார மையத்துடன் இணைந்து சிகை அலங்கார நிபுணர்கள் 20க்கும் மேற்பட்டோர் வருகை தந்து மாணவிகள் முடி அடர்த்திக்கு ஏற்ப முடிகளை வெட்டி சேகரித்தனர். நேற்றை தினம் 30 கிலோ வரையிலும் முடி தானமாக பெறப்பட்டது. இதனை கொண்டு தயார் செய்து புற்று நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக வழங்கவும் முடிவு செய்துள்ளனர்.