×

கிழவனேரி ஊராட்சி துணைத்தலைவர் தேர்வு வலையபட்டி, சென்னம்பட்டி துணை தலைவர் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு

திருமங்கலம், மார்ச் 5: திருமங்கலம் அருகேயுள்ள கிழவனேரி ஊராட்சி துணைத்தலைவர் தேர்தல் மூலமாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் டி.வலையபட்டி மற்றும் சென்னம்பட்டி ஊராட்சிகளில் துணைத்தலைவர் தேர்தல் நேற்று மீண்டும் மூன்றாம் முறையாக ஒத்திவைக்கப்பட்டது.
திருமங்கலம் ஒன்றியத்திலுள்ள 38 ஊராட்சிகளில் 37 ஊராட்சிகளில் துணைத்தலைவர் தேர்தல் ஏற்கனவே நடந்து முடிந்தது. கிழவனேரி ஊராட்சி துணைத்தலைவர் தேர்தல் மட்டும் கடந்த இரண்டு முறை வார்டு உறுப்பினர்களின் வருகை குறைவாக இருந்ததால் ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று மூன்றாம் முறையாக துணைத்தலைவர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த ஊராட்சியில் மொத்தம் 9 உறுப்பினர்கள் உள்ளனர். தலைவரையும் சேர்த்தால் மொத்தம்10 பேர் உள்ள நிலையில் நேற்று துணைத்தலைவர் தேர்தல் நடந்தது. இதனையொட்டி கிழவனேரி ஊராட்சி அலுவலகம் முன்பு திருமங்கலம் தாலுகா இன்ஸ்பெக்டர் சிவசக்தி தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். துணைத்தலைவர் பதவிக்கு 4வது வார்டு உறுப்பினர் தனலட்சுமி, 5வது வார்டு உறுப்பினர் செல்வராணி போட்டியிட்டனர்.

மொத்தமுள்ள 10 உறுப்பினர்களில் 7வது வார்டு உறுப்பினர் சந்திரா வாக்கெடுப்பு புறக்கணிக்கும் வகையில் ஊராட்சி அலுவலகத்திற்கு வரவில்லை. மீதமுள்ள உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதில் 4வது உறுப்பினர் தனலட்சுமிக்கு 5 வாக்குகளும், எதிர்த்து போட்டியிட்ட செல்வராணிக்கு 4 வாக்குகளும் கிடைத்தன. இதனால் 1 வாக்கு வித்தியாசத்தில் தனலட்சுமி கிழவனேரி ஊராட்சியின் துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்திய அதிகாரி ராஜவேலு தெரிவித்தார். துணைத்தலைவர் தேர்தலை தேர்தல் ஆணைய ஏற்பாட்டின் படி வீடியோ பதிவு செய்யப்பட்டது.
கோரம் இல்லாததால் வலையபட்டி, சென்னம்பட்டி தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு. கள்ளிக்குடி ஒன்றியத்திலுள்ள 36 ஊராட்சிகளில் டி.வலையபட்டி மற்றும் சென்னம்பட்டி ஆகிய இரண்டு ஊராட்சிகளை தவிர்த்து மீதமுள்ள 34 ஊராட்சிகளில் துணைத்தலைவர் தேர்தல் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டது.

இந்தநிலையில் நேற்று வலையபட்டி, சென்னம்பட்டி ஆகிய இரண்டு ஊராட்சிகளுக்கு துணைத்தலைவர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மொத்தம் தலா 7 உறுப்பினர்கள் கொண்ட இந்த இரண்டு ஊராட்சிகளிலும் தலா 3 பேர் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க வந்திருந்தனர். மீதமுள்ள 4 வார்டு உறுப்பினர்கள் வரவில்லை. இதனால் போதுமான கோரம் இன்றி வலையபட்டி மற்றும் சென்னம்பட்டி ஊராட்சித்துணைத்தலைவர் தேர்தலை நேற்று மீண்டும் மூன்றாம் முறையாக அதிகாரிகள் ஒத்திவைத்தனர். அதே நேரத்தில் துணைத்தலைவர் தேர்தலையொட்டி இந்த இரண்டு ஊராட்சிகளிலும் பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags : Chennambatti ,
× RELATED அந்தியூர் அருகே கிணற்றில் விழுந்த...